close
Choose your channels

குரலில் இசையை கொண்ட "குரல் இனியாள்".....! பாடகி சித்ரா பர்த்டே ஸ்பெஷல்....!

Tuesday, July 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

 

தன்னுடைய குரல் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை தன்பால் ஈர்த்த சின்னக்குயில் சித்ரா அவர்களின், 58-ஆவது பிறந்தநாள் இன்று ஜூலை 27. காலை முதலே ரசிகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் பலரும் சித்ராவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

குரலழகி சித்ரா அம்மா குறித்த சுவாரசிய தகவல்கள்:

குழந்தைகளின் மீது தீராத அன்பு வைத்துள்ள சின்னக்குயில் சித்ராவை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சித்ரா அம்மா என்றுதான் அன்போடு அழைப்பார்கள். கோபம் என்ற சொல்லே தெரியாத அளவிற்க்கு குழந்தை மனசு அவர்களுக்கு உண்டு.

6 முறை தேசிய விருது பெற்றும், உலக புகழ் பெற்றும், லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரை ரசிக்க முக்கிய காரணம் அவரின் எளிமையான பண்பும், நற்குணமும் தான். மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒரியா, இந்தி, அசாமிய, வங்காளம் 10-க்கும் அதிகமான மொழிகளில் பாடி, ரசிகர்களை தன் வசப்படுத்திய பெருமை சித்ராவையே சாரும். ஆரம்ப காலகட்டத்தில் பாடகர் யேசுதாஸ் அவர்களுடன், மேடைக் கச்சேரிகளில் பாடி வந்தார்.

தென்னிந்திய ரசிகர்களால் மெலோடி குயின் , நைட்டிங்கேல் , சின்னக்குயில் , வானம்பாடி , சங்கீத சரஸ்வதி என்ற பட்டங்களுடன், செல்லமாக அழைக்கப்படுகிறார். தென்னிந்திய பிலிம்பேர் விருதை எட்டுமுறை வென்றுள்ளார்.

இந்தியாவில் குடிமை விருதுகளில் 2-ஆவது உயரிய விருதாக கருதப்படும் "பத்ம விபூசண்" விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. முதன் முதலாக மலையாளத்தில் தான் சித்ரா பாடகியாக அறிமுகம் செய்யப்பட்டார்.
இதன்பின்பு தமிழ் சினிமாவில் "பூஜைக்கேத்த பூவிது" பாடல் மூலம் பாடகியாக அறிமுகமாக, ஆயிரக்கணக்கான தமிழ் நெஞ்சங்களை கொள்ளையடித்தார்.

1985-ல் பூவே பூச்சுடவா திரைப்படத்தில் "சின்னக்குயில் பாடும் பாட்டுக் கேட்குதா" என்ற பாடலை பாடியிருந்தார். இதன் மூலம் தான் சின்னக்குயில் சித்ரா என்று ரசிகர்கள் இவரை அன்போடு அழைத்தனர்.

மெல்லிய குரலாலும், ராகத்தாலும் நம்மை ஈர்த்த சித்ரா சிந்து பைரவி படத்தில் " பாடறியேன் படிப்பறியேன்" என்ற பாடலை பாடியதன் மூலம் சிறந்த பாடகிக்கான "தேசிய விருது" பெற்றார்.

80-களில் இசையமைப்பாளர்கள் தங்கள் பாடலுக்கு உயிரூட்டவும், பாடலை மெருகேற்றவும் சித்ரா-வின் குரலை பயன்படுத்திக் கொண்டார்கள். சந்திரபோஸ் என்ற இசையமைப்பாளரின் இசையில், சித்ரா பாடிய "மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு', சின்னக்கண்ணா செல்லக்கண்ணா, 'பூ முடிக்கணும் ', 'வண்ணாத்திப்பூச்சி வயசென்னாச்சு’ பாடல்கள் மிகுந்த வரவேற்பை பெற்றன.

குன்னக்குடி வைத்யநாதன் அவர்களின் 'உலா வந்த நிலா' திரைப்படத்தில் சில பாடல்களையும், டி.ராஜேந்திரனின் இசையில் ஒரு சில பாடல்களையும் பாடியுள்ளார் சித்ரா.

பல மொழிகளில் பாடி வானுயர்ந்த நிற்கும் பாடகி சித்ரா இளையராஜா, கங்கை அமரன், மெல்லிசை மன்னர் விஸ்வநாதன், சங்கர் - கணேஷ், ஏ ஆர் ரகுமான், தேவா, எஸ் ஏ ராஜ்குமார், மரகதமணி, சிற்பி, வித்யாசாகர், யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ், பிரேம்ஜி வரை ஏராளமான இசையமைப்பாளர்களுடன், பாடல்களை பாடியுள்ளார்.

யேசுதாஸ் - விஜய் யேசுதாஸ், இளையராஜா -யுவன், sp.பாலசுப்ரமணியம் - spb.சரண், கங்கை அமரன் - பிரேம் ஜி(இசையமைப்பாளராக) வரை இரண்டு தலைமுறை பாடகர்களுடன், சித்ரா பாடல் பாடியுள்ளார். அதுவும் சித்ரா- மனோ கூட்டணி என்றால் பாடல் ஹிட் என்று, ரசிகர்களும், திரைத்துறையினரும் முடிவு செய்து விடுவார்கள். அந்த அளவிற்கு இவர்கள் பாடல் கூட்டணி ரசிக்கும் வகையில் இருக்கும்.

மென்மை குரலை தாண்டி, மின்சாரக்கனவு படத்தில் ""ஊஊ லலல்லா' என்ற துள்ளல் பாடலை பாடி, ரசிகர்களை ஆட்டம் போட வைத்தார். இப்பாடலுக்காக சிறந்த பாடகியாக "தேசிய விருது" பெற்றார். 1995-இல் "கலைமாமணி விருது" இவருக்கு கிடைத்தது.

ரஹ்மான் இசையில் வெளியான 'புத்தம்புது பூமி வேண்டும்' , 'என் மேல் விழுந்த மழைத்துளியே' , 'தென் கிழக்குச் சீமையிலே', 'கண்ணாளனே' போன்ற சித்ராவின் அனைத்து பாடல்களும், இன்றும் பல இளைஞர்களின் பிளே லிஸ்டில் வலம் வருகின்றன. ரஹ்மானின் பெரும்பாலான ஹிந்தி பாடல்களை சித்ரா அம்மாவே பாடியுள்ளார்.

தமிழ் நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில், 36-க்கும் அதிகமான மாநில விருதுகளை பெற்ற ஒரு பின்னணி பாடகி சித்ரா மட்டுமே. சித்ராவிற்கு கடந்த 2005-ஆம் ஆண்டு, மார்ச் 28- ம் தேதி, ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்களிடமிருந்து "பத்ம ஸ்ரீ விருது" வழங்கி கவுரவிக்கப்பட்டது. அப்போது பத்திரிக்கைக்காரர்கள் இவரின் பேட்டிக்காக காத்திருந்தார்கள். தன் சகோதரியின் குழந்தைகளின் மேல் பேரன்பு வைத்திருந்த சித்ரா நடிகர் ஷாரூக்கானிடம் ஆட்டோகிராப் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

1985 முதல் 12 முறை கேரள மாநில விருதையும், 6 முறை ஆந்திர மாநில நந்தி விருதுகளையும், 2 முறை கர்நாடக மாநில விருதுகளையும், நான்கு முறை தமிழ் நாடு மாநில விருதுகளையும் பெற்று இசைக்கு பெருமை தேடித்தந்தார். சித்ரா பாடி தேசிய விருது கிடைத்த 'ஒவ்வொரு பூக்களுமே' பாடல், திருச்சியில் இருக்கும் பள்ளியில் காலை நேர பிரார்த்தனை பாடலாக இருந்து வருகிறது. இப்படி சித்ராவின் சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம், ஒரு கட்டுரையில் அடக்க முடியாது சின்னகுயில் சித்ரா -வின் பெருமைகளையும், இவர் அடைந்த உயரத்தையும்.

வானளவு புகழடைந்தும், கடலளவு ரசிகர்கள் கொண்டும், எண்ணிக்கையில்லா விருதுகள் பெற்றும், கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் குடி கொண்டும், எந்த அதிகார மமதையும் இல்லாமல், அனைவரிடமும் அன்பாகவே பழகுவார்.

"எனக்குத் தெரிந்ததெல்லாம் ஓரளவு சங்கீதம் மட்டுமே. ஆனால் அந்த இசையே எனக்கு எல்லாம்" என்பது சித்ரா-வின் தாரக மந்திரமாகும். இன்று தன்னுடைய 58-ஆவது அகவையை கொண்டாடும், குரலில் இசையை வைத்த சித்ரா அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்....! அவர் இன்னும் ஆயிரக்கணக்கான பாடல்களை திரையுலகிற்கு தந்து, ரசிகர்களை ஆள வேண்டும் என்பதே எங்களின் தீராத ஆசை.....!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.