அட்லியின் உதவி இயக்குனர்கள் உள்பட சிவகார்த்திகேயனின் 3 பட இயக்குனர்கள் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Friday,August 28 2020]

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அட்லி, ’ராஜா ராணி’ என்ற திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் தளபதி விஜய் நடித்த ’தெறி’ ’மெர்சல்’ மற்றும் ’பிகில்’ ஆகிய மூன்று வெற்றி படங்களை இயக்கியுள்ளார். அவரது அடுத்த படம் குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அட்லியிடம் உதவி இயக்குனராக இருந்த இருவர், சிவகார்த்திகேயன் படங்களை தனித்தனியாக இயக்க உள்ளதாக வந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் சிவகார்த்திகேயனை சந்தித்து அட்லியின் இரண்டு உதவி இயக்குனர்கள் கதை கூறியதாகவும், அந்த இரண்டு கதைகளுமே சிவகார்த்திகேயனுக்கு பிடித்து விட்டதால் லாக்டவுன் முடிந்தவுடன் படப்பிடிப்பை தொடங்கலாம் என்று உறுதிமொழி தரப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்த இந்த இரண்டு படங்களில் ஒன்றை லைக்கா நிறுவனம் தயாரிக்கும் என்றும் இன்னொரு படத்தை சிவகார்த்திகேயனே தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற திரைப்படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தின் திரைக்கதையை தற்போது முழுவீச்சில் தேசிய பெரியசாமி எழுதி வருவதாகவும் கூறப்படுகிறது. 

எனவே சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அடுத்தடுத்த மூன்று படங்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் இந்த மூன்று படங்களும் அடுத்த ஆண்டு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே ரவிக்குமார் இயக்கத்தில் ’அயலான்’ என்ற திரைப்படத்திலும் நெல்சன் இயக்கத்தில் ’டாக்டர்’ என்ற திரைப்படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார் என்பதும் இந்த இரண்டு திரைப்படங்களும் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.