ஒரு தடவை ஜெயிச்சா பத்தாது! ஓவ்வோரு தடவையும் ஜெயிக்கணும்: சிவகார்த்திகேயனுக்கு டுவீட் போட்ட கலெக்டர்

தமிழகத்தில் சென்னை உள்பட ஒருசில மாவட்டங்களில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்தாலும் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா வைரஸ் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தீவிர நடவடிக்கை காரணமாகவே சில மாவட்டங்கள் கொரோனா இல்லாத மாவட்டமாக உருவாகி வருகிறது.

அந்த வகையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜய கார்த்திகேயன் அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் மிகத் தீவிர நடவடிக்கை எடுத்தார். பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா வைரஸ் நோயாளிகள் குணமடைந்தனர்.

இந்த நிலையில் கடைசியாக 114 பேர் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களும் முற்றிலும் குணமடைந்து விட்டதாகவும் தற்போது திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த டுவிட்டை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் அவருக்கு பாராட்டு தெரிவித்து ’உங்கள் சேவை தொடரட்டும் உங்களைப் போன்று அயராது உழைப்பவர்கள் தான் தேவை. உங்களுக்கு எப்பொழுதும் நாங்கள் ஆதரவுடன் இருப்போம் என்று தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் இந்த டுவிட்டை பார்த்து மகிழ்ச்சி அடைந்த கலெக்டர் விஜய கார்த்திகேயன் ’நன்றி பிரதர் நாம் கொரோனா வைரசுக்கு எதிராக ஒரு தடவை ஜெயிச்சா பத்தாது, ஒவ்வொரு தடவையும் ஜெயிக்கணும் ஜெயிப்போம் என்று சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா பட வசனத்தை பதிவு செய்தார். இந்த பதிவை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்த நடிகர் சிவகார்த்திகேயன் ’ஜெயிப்போம்’ என்று பதிவு செய்துள்ளார் சிவகார்த்திகேயன் மற்றும் திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜய கார்த்திகேயன் ஆகியோர்களின் இந்த டுவீட்டுக்கள் தற்போது வைரலாகி வருகிறது.