நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட சிவகார்த்திகேயன் படம்!

  • IndiaGlitz, [Tuesday,January 28 2020]

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ’இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன் திரைப்படம் ஒன்று கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு அவரும் பாடல்களை கம்போஸ் செய்து முடித்து கொடுத்துவிட்டார்.

இந்த நிலையில் இந்த படத்தின் ஒருசிலகட்ட படப்பிடிப்பு நடந்தாலும் அடுத்தகட்ட படப்பிடிப்பு கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நடைபெறாமல் இருந்தது. இன்னும் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்தால் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்ற நிலையில் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இந்த படத்தை ஒப்புக்கொண்ட பின்னர் சிவகார்த்திகேயன் மூன்று நான்கு படங்களில் நடித்து முடித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24ஏஎம் ஸ்டுடியோஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கடைசி இரண்டு கட்ட படப்பிடிப்புகள் இன்று முதல் தொடங்க இருப்பதாகவும் விரைவில் இந்த படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் இன்னும் ஒரு சில நாட்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது இதனை அடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.