close
Choose your channels

தூக்கத்தில் உங்களை அமுக்கும் பேய் எது தெரியுமா? அறிவியல் விளக்கம்!

Friday, June 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நான் தூங்கிக்கொண்டு இருந்தபோது யாரோ என்னை பிடித்து அழுத்தினார்கள், என்னால் மூச்சு கூட விடமுடியவில்லை. நான் கைக்கால்களை உதைத்துத் தள்ளினேன், ஆனால் அதுவும் வேலைக்கு ஆகலை… பக்கத்தில் இருப்பவர்களை கூப்பிட நினைத்து எனக்குள்ளே பேசிக்கொண்டு இருக்கிறேன். ஆனால் நான் பேசுவது யாருக்கும் கேட்கவில்லை. இதுபோன்ற அனுபவம் நம்மில் பெரும்பாலானோருக்கு நடந்து இருக்கும்.

இந்த அனுபவத்தை மற்றவர்களிடம் கூறினால், பேய் அல்லது ஏதோ காத்துக் கருப்பு வந்து இருக்கும். அது நடமாடக் கூடிய இடத்தில் நாம் இருக்கிறோம். அதனால்தான் அது நம்மை பிடித்துத் தள்ளுகிறது என்பது போன்ற அமானுஷ்ய விஷயங்களை கூற ஆரம்பித்து விடுவார்கள். மேலும் இதுபோன்ற அனுபவம் பெரும்பாலான மனிதர்களுக்கு அன்றாடம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இதை வைத்துக் கொண்டு பேய், காத்துக் கருப்பு, முனி என்று ஏராளமான கட்டுக் கதைகள் நம்மிடம் உலவி வருகின்றன. இந்த கட்டுக் கதைகளை உளவியல் நிபுணர்கள் முற்றிலும் மறுக்கின்றனர். மேலும் இது Sleeping paralysis என்று விளக்கம் கூறுகின்றனர்.

அதாவது ஆழ்ந்த உறக்கத்திற்கும் விழிப்பு நிலைக்கும் இடையே நடக்கும் மூளை தடுமாற்றத்தால் வரும் சிக்கல் என விளக்கம் அளிக்கின்றனர். இதற்கு ஆழ்ந்த உறக்கம் இருந்தாலே போதுமானது எனவும் அதோடு இது சாதாரண பிரச்சனைதான் என்றும் பெரும்பாலான மனிதர்களுக்கு இதுபோன்ற பிரச்சனை வருவது இயல்பு எனவும் கூறி நம்மை தேற்றச் செய்கின்றனர்.

நாம் தூங்கிக் கொண்டு இருந்தாலும் நம்முடைய மூளை இயங்கிக் கொண்டு இருக்கும் என்பது தெரிந்ததுதான். அதோடு மனிதன் தூங்கிக் கொண்டு இருந்தாலும் அவனுக்கு ஆயிரக்கணக்கான கனவுகள் வருவதும் இயல்பான விஷயம்தான். இப்படி சதா கனவு கண்டு கொண்டு இருக்கும் மனிதன் கனவு காணும்போது அதற்கு ஏற்ப கை, கால்களை அசைத்துவிடக் கூடாது என்பதற்காகவே நம்முடைய உடல் அசைவில்லாமல் Muscle paralysis நிலைக்குச் சென்றுவிடும்.

இப்படி உடல் அசைவே இல்லாமல் paralysis ஆகிவிட்டால் நிம்மதியான தூக்கமும் கனவுகளும் நமக்கு இருக்கும். இந்த நிலையில் கனவு காணும்போது அதற்கு ஏற்ப நாம் கை, கால்களை அசைப்பதில்லை. ஆனால் நாம் இன்னும் தூங்கவே ஆரம்பிக்கவே இல்லை. அரைத் தூக்கத்தில் நம்முடைய கருவிழி (Rapid eye movement sleep) அசைந்துக் கொண்டு இருக்கிறது. ஆனால் உடல் மட்டும் தூக்கத்திற்கு ஏற்ப Muscle paralysis நிலைக்குச் சென்று விட்டது. இப்படி உடல் அசைவின்றி இருக்கும் போது தசைகள் இழுத்துப் பிடிக்கும் நிலையை உணரத் துவங்கிவிடும்.

இப்படி உடல் Muscle paralysis க்கும் அரைத் தூக்கத்திற்கும் இடையில் தசைகள் இழுத்துப் பிடிக்க ஆரம்பித்து விட்டதால் நம்மை யாரோ அமுக்குவது போன்ற உணர்வு ஏற்பட்டு விடும். இதனால் நமது மூளை நமக்கு ஏதோ ஆபத்து வந்துவிட்டது என புரிந்து கொண்டு உடனே அதில் இருந்து தப்பிக்க உடல் உறுப்புகளுக்கு எச்சரிக்கை சமிஞ்சையை அனுப்புகிறது. இதனால் மூளை சொல்வதைக் கேட்டுக்கொண்டு நாம் கை, கால்களை அசைக்க துவங்கி விடுகிறோம்.

ஏதோ பள்ளத்தில் விழுந்து விட்டது போலவும், மலையில் இருந்து குதிப்பது போலவும் உணர்ந்து கொண்டு அதில் இருந்து தப்பிக்க முயற்சி செய்கிறோம். மேலும் யாரோ நம்மை பிடித்து அழுத்துவது போல உணர்ந்து கொண்டு அதில் இருந்து தப்பிக்க முயற்சி செய்கிறோம். மற்றவர்களை கூப்பிட துவங்குகிறோம். ஆனால் இவையெல்லாம் அரைத் தூக்கத்தில், அதுவும் உடல் அசைவின்றி போன paralysis நிலையில் நம்முடைய மூளை கொடுக்கும் பாதுகாப்பு உணர்வால் ஏற்படுவது என்பதை மருத்துவர்கள் சுட்டி காட்டுகின்றனர்.

இதுபோன்ற உணர்வுகள் ஏற்படாமல் இருக்க ஒருவர் ஆழ்ந்த தூக்கத்திற்கு எளிதாக சென்றுவிட வேண்டும். இதற்காக நிம்மதியான மனநிலை, பதற்றம் இல்லாத உணர்வு, உடற்பயிற்சி போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என உளவியல் நிபுணர்கள் அறிவுரை கூறுகின்றனர். மேலும் இதுபோன்ற அனுபவங்களில் எந்த அமானுஷ்யமும் இல்லை என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.