மகள்களின் உதவியால் வயலை உழுத தந்தை: வழக்கம்போல் உதவிய நடிகர் சோனுசூட்

யாருக்காவது உதவி தேவை என்றால் சமூக வலைதளம் மூலம் நடிகர் சோனு சூட் அவர்களுக்கு டேக் செய்து உதவி கேட்டால் உடனே உதவி கிடைக்கும் என்பதும், கடந்த சில மாதங்களில் நடந்த பல நிகழ்ச்சிகள் இதற்கு ஆதாரம் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் தற்போது விவசாயி ஒருவருக்கு நடிகர் சோனு சூட் உதவிய தகவல் வெளிவந்துள்ளது.

சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி என்ற பகுதியில் உள்ள விவசாயி ஒருவர் இந்த கொரனோ ஊரடங்கு காரணமாக தனது நிலத்தை உழுவதற்கு கூட காசில்லாமல் தவித்துள்ளார். அவரிடம் உழுவதற்கு வாடகைக்கு காளை மாடுகள் வாங்க கூட சுத்தமாக காசே இல்லை. 

எனவே வேறுவழி இல்லாமல் தனது நிலத்தை உழுவதற்காக தனது இரண்டு மகள்களையும் உதவிக்கு அழைத்து மனைவி மகள்களுடன் தானு சேர்ந்து தானும் நிலத்தை உழுதார். அவருடைய இரண்டு மகள்களும் தள்ளாடி தள்ளாடி உழுதுகொண்டு வர, அவருடைய மனைவி பின்னால் விதைகளை தூவி வந்தார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் இந்த வீடியோவை பார்த்த நடிகர் சோனு சூட் உடனடியாக நாளை காலையே அந்த விவசாயி வீட்டின் முன் இரண்டு காளைகள் நிற்கும் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அந்த இரண்டு பெண் குழந்தைகளின் படிப்புக்கும் தான் முழு பொறுப்பு என்றும் கூறியுள்ளார். மேலும் விவசாயம் நமது நாட்டின் பெருமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மகள்களின் உதவியால் நிலத்தை உழுத விவசாயிக்கு நடிகர் சோனு சூட் உதவி செய்து உள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.