close
Choose your channels

எனக்கு இந்தியா மீது ஈர்ப்பு இருப்பதற்கு இதுதான் காரணம்… ஒபாமாவின் சுவாரசிய அனுபவம்!!!

Tuesday, November 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எனக்கு இந்தியா மீது ஈர்ப்பு இருப்பதற்கு இதுதான் காரணம்… ஒபாமாவின் சுவாரசிய அனுபவம்!!!

 

அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா தான் எழுதிய A promised land புத்தகத்தை தற்போது உலகம் முழுவதும் பல இடங்களில் வெளியிட்டு வருகிறார். அந்தப் புத்தகத்தில் தான் சந்தித்த உலகத் தலைவர்கள், அரசியல் நிலைமைகள், தான் கடந்து வந்த பாதை, அனுபவம், தற்போதைய தொற்றுச் சூழல் எனப் பல நிலவரங்களையும் குறிப்பிட்டு எழுதி இருக்கிறார். அதில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குறித்து ஒபாமா வெளியிட்ட கருத்து இந்தியாவில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல ஒபாமா தன்னுடைய சிறிய வயதில் இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் கேட்டு வளர்ந்த தனது அனுபவத்தைப் பற்றியும் இந்தியா மீது தனக்கு ஏற்பட்ட ஈர்ப்பை குறித்தும் எழுதி இருக்கிறார். அந்தக் கருத்து தற்போது கடும் வைரலாகி வருகிறது. இந்தோனேசியாவில் தன்னுடைய குழந்தைப் பருவத்தை கழித்ததாகத் தெரிவித்து உள்ள ஒபாமா புகழ்பெற்ற காவியங்களான ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் தான் கேட்டு வளர்ந்ததாகத் தெரிவித்து உள்ளார். இதனால் இந்தியா எப்போதும் தனக்கு ஒரு சிறப்பம்சம் பொருந்திய நாடாகவே இருந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

“இந்தோனேசியாவில் எனது குழந்தைப் பருவத்தின் ஒரு பகுதியை ராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் இந்து காவிய கதைகளைக் கேட்டு கழித்தேன். கிழக்கிந்திய நாடுகளின் மதங்களில் எனக்கு அதிக ஆர்வம் இருந்தது. பாகிஸ்தான் மற்றும் இந்தியாவை சேர்ந்த எனது நண்பர்கள் எனக்கு பருப்பு வகைகள், கீமா ஆகிய உணவுகளை சமைக்கவும் பாலிவுட் படங்கள் பார்க்கவும் கற்றுக் கொடுத்தார்கள். இவை அனைத்தின் காரணமாகவும் இந்தியா மீதான எனது ஈர்ப்பு அதிகரித்து இருக்கலாம்” என ஒபாமா எழுதியுள்ளார்.

மேலும் உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு மக்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். அதோடு பழமையான 2 ஆயிரம் இனக்குழுக்கள் அங்கு வாழ்கிறார்கள். ஒரே இடத்தில் இருந்து கொண்டு 700 க்கும் மேற்பட்ட மொழிகளை மக்கள் இயல்பாக பேசி வருகிறார்கள். இதெல்லாம் எனக்கு வியப்பாக இருக்கிறது. அதைத்தவிர, அரசு முறை பயணமாக கடந்த 2010 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே புராணங்களில் வழியாக நான் இந்தியாவை பார்த்து இருக்கிறேன். அதனால் எனது சிறிய வயது முதலே இந்தியா மீது எனக்கு அதிக ஈர்ப்பு இருக்கிறது. அதற்கு ராமாயணம் போன்ற காவியங்களும் ஒரு காரணம் என்று ஒபாமா தெரிவித்து இருக்கிறார்.

மேலும் தனது புத்தகம் இளைஞர்களுக்கானது, உலகத்தை மீண்டும் அமைப்பதற்கான அழைப்பு, கடின உழைப்பு, உறுதிப்பாடு மற்றும் ஒரு பெரிய அளவிலான கற்பனையின் மூலம் இறுதியாக நம்மில் உள்ள சிறந்த அம்சங்கள் அனைத்தையும் நாம் ஒன்றிணைத்து ஒரு புதிய அமெரிக்காவை உண்டாக்க வேண்டும் என்று ஒபாமா கூறியுள்ளார். 768 பக்கங்களைக் கண்ட அவரது சுயசரிதையின் முதல் பக்கம் அச்சில் இல்லாமல் மஞ்சள் நிறத்திலான கையெழுத்து தாளாக இருக்கிறது. அதில், தனக்கு சுருக்கமாக எழுதத் தெரியாது என்று குறிப்பிட்டு உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.