கதைகேளுங்கள்!!! இணையம் வழியே கதைச்சொல்லும் கதைச்சொல்லிகள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரு தலைமுறைக்குமுன் வாழ்ந்த எல்லா தாத்தா, பாட்டிகளும் ஒரு சமூகத்தின் கதைச்சொல்லிகளாக இருந்தனர். தங்களது வாழ்க்கையின் அனுபவம் முதற்கொண்டு கேட்ட கதைகளையும், நாட்டுப்புறங்களில் வழங்கப்பட்ட கதைகளையும் சொல்லித் தங்களது கற்பனைகளை அடுத்தத் தலைமுறைக்குக் கடத்திக்கொண்டு வந்தனர். ஆனால் நகர்ப்புறச் சமூகமாக மாறிவிட்ட இந்தத் தலைமுறை பெரும்பாலும் தொலைக்காட்சி, இணையம் என்று நவீனத்தின் பிடியில் சிக்கிக்கொண்டு அவசரகதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். நொடிப்பொழுதில் கொண்டு சேர்க்கப்படும் கருத்துக்களுக்கு மட்டுமே தற்போது அதிக மதிப்புகள் கிடைக்கின்றன. இந்த இக்கட்டான சூழலுக்குள் கதைச்சொல்வதெல்லாம் அறவே காணாமல் போய்விட்டது.
திண்ணைப் பள்ளிகளில் காதால் கேட்டு மனனம் செய்து படிக்கும் பழக்கம் இருந்தவரையில் நமது மூளையில் பல்லாயிரக்கணக்கான விஷயங்களை நினைவில் வைத்திருந்தோம். கற்பனை வளத்திற்கும் நினைவு வளத்திற்கும் காதால் கேட்பது ஒரு சிறந்த வழிமுறையாக இருந்தது. சிலநேரங்களில் பாடங்களை வீடியோவிலோ அல்லது ஆடியோவிலோ கேட்டுப் படிக்கும்போது மிக எளிதாக புரிந்து விடவும் செய்கிறது. அத்தகைய அரிதாகிப்போன கதைச்சொல்லும் பழக்கம், தற்போது தமிழகத்தில் மிகச்சிலரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அவர்களுள் மிக முக்கியமானவராக பவா செல்லதுரை விளங்குகிறார்.
பவா செல்லதுரை கதைகள் மற்றும் உரைகள் தற்போது இணையத்தில் கிடைக்கின்றன. ஒரு கதாசிரியனின் முழுவீரியத்தையும் தனது எளிமையான பேச்சில் கொண்டுவந்து விடுகிறார் பவா செல்லதுரை.
எஸ்.ராமகிருஷ்ணன்: வரலாற்றையும் கதைகளாக சொல்லும் எஸ்.ராமகிருஷ்ணன் இந்த காலக்கட்டத்தின் பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். அனைத்து வரலாற்று நிகழ்வுகளையும் தனக்கே உரிய வரலாற்று சுவடுகளோடு எளிய பாணியில் சொல்லும் எஸ். ராமகிருஷ்ணனின் உரைகளும் இணையத்தில் கிடைக்கின்றன. வரலாற்று நிகழ்வுகளை எளிமையான தரவுகளாகக் கேட்பதற்கு இவரது உரைநடை பேச்சுகள் மிகவும் உதவியாக இருக்கும்.
சுல்தானா பர்வீன்: தனது கதைச்சொல்லும் திறமையாலும், அற்புதமான இலக்கிய புலமையாலும் தமிழகத்தில் ஒரு கதைச்சொல்லியாகவே திகழ்ந்து வருகிறார் சுல்தானா பர்வீன். எளிமையான வார்த்தை ஜாலம், குரல் வளம் என அனைவரையும் கவர்ந்து இழுக்கும் திறனுடைய சுல்தானா பர்வீனின் பேச்சாற்றலையும் இணைத்தில் இருந்து கேட்கமுடியும்.
மனுஷ்யபுத்திரன் உரைகள்: ஒரு நவீனக் கவிஞன் தனது சுயமான அடையாளத்துடன் இந்தச் சமூகத்தின் போக்குகளை தனது குரலில் படம் பிடித்துக்காட்டுகிறான். அவனது எழுத்தைப்போன்றே அவனது பேச்சுகளும் சமூகத்தில் விவாதங்களைத் தூண்டுகின்றன. இப்போது மனுஷ்யபுத்திரனின் அனைத்து உரைகளையும் இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கேட்டு சமூகத்தை புரிந்துகொள்ளலாம்.
சுகிசிவம்: பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் இயங்கிவருகின்ற சுகிசிவம் திருக்குறளுக்கு தனக்கே உரிய பாணியில் கதைகளாகவே உரை சொல்லியிருக்கிறார். திருக்குறளுக்கு மாறுபட்ட ஒரு எளிமையான உரைவடிவத்தை அதுவும் இவரது குரலில் கேட்கும்போது இன்னும் ஒருபடி மேலே லயிக்க வைக்கிறது. இவரது பேச்சுகளும் இணையத்தில் கிடைக்கின்றன.
சுபவீரபாண்டியன்: இந்நூற்றாண்டின் அறிவுக்களஞ்சியம், தனது கொள்கைகளுக்காக மட்டும் அல்ல, பேச்சின் நடைக்காகவும் எளிமையான தோற்றத்திற்காகவும் போற்றப்படுபவர் சுபவீரபாண்டியன். வரலாற்றின் ஆழங்களையும் அகலங்களையும் தனது கொள்கை சார்ந்து ஆய்வு செய்து பார்க்கும் பழக்கம் உள்ளவர். இவரது பேச்சுநடைக்கு மயங்காதவர்களே இல்லை என்று சொல்லலாம். அவரது உரைப்பேச்சுகள் எதிரும் புதிரும் என்ற தலைப்பின் கீழ் கிடைக்கின்றன. கேட்டு அறிவுபெறலாம்.
கொரோனவுக்கு நடுவில் பேச்சுக்களையும் உரைநடைகளையும் கேட்டு நேரத்தை உயிர்ப்புள்ளதாக மாற்றுவதற்கு ஒரு எளிய வழிமுறையாக இந்த ஆளுமைகள் உதவுவார்கள். பயன்பெறுங்கள்!!!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.