'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பில் ஸ்பைடர்மேன்? சுஹாசினியின் இன்ஸ்டா புகைப்படம் வைரல்!

  • IndiaGlitz, [Friday,July 30 2021]

பிரமாண்ட இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் புதுச்சேரியில் நடந்தது என்பதும் அதன் பின்னர் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படப்பிடிப்பில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய் உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு குறித்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சுஹாசினி வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ஸ்பைடர்மேன் போன்று உள்ளவர்களை குறிப்பிட்டுள்ள சுஹாசினி, ‘அவர்கள் ஸ்பைடர்மேன் அல்லது சூப்பர்மேன் அல்ல என்றும் கேமரா தொழில்நுட்ப கலைஞர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படப்பிடிப்பில் ’பொன்னியின் செல்வன்’ கதையில் வரும் ஆதித்த கரிகாலன் போர் குறித்த காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், கிஷோர், ஐஸ்வர்யா லட்சுமி உள்பட பலர் நடித்துள்ளனர். ரவிவர்மன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் இந்த படம் சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக தயாராகி வருகிறது.