நடராஜனுக்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்ட 6 ஐதராபாத் வீரர்கள்!

ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டம் இன்று டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் நிலையில் ஹைதராபாத் அணியின் முக்கிய பந்து வீச்சாளர்களில் ஒருவரான நடராஜனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்

இந்த நிலையில் நடராஜன் உடன் தொடர்பில் இருந்த விஜய் சங்கர், விஜய்குமார், ஷ்யாம் சுந்தர், அஞ்சனாவாணன், துஷ்கர் கேதார், பெரியசாமி கணேசன் ஆகிய 6 ஹைதராபாத் அணியினர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் இன்றைய போட்டியில் இடம்பெற மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இன்றைய டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாகவே இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட் நாட்டிற்கு போட்டிகள் மாற்றப்பட்ட நிலையில் தற்போது அங்கும் கொரோனா தன் வேலையை காட்டியிருப்பது ஐபிஎல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இன்றைய போட்டியில் நடராஜன் விளையாட மாட்டார் என்ற தகவல் தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.