அஜித்துக்கு அறுவை சிகிச்சை நடந்தது மூளையில் அல்ல.. மேனேஜர் சுரேஷ் சந்திரா விளக்கம்..!

  • IndiaGlitz, [Friday,March 08 2024]

நடிகர் அஜித்துக்கு மூளையில் அறுவை கிச்சை நடந்ததாக நேற்று இரவு முதல் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் அந்த செய்தியை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அவர்கள் மறுத்துள்ளார்.

நடிகர் அஜித் நேற்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் திடீரென அவரது மூளையில் கட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இதனை அடுத்து நான்கு மணி நேரம் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த தகவலை அஜித் தரப்பு அல்லது மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்யாத நிலையில் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் இந்த செய்தியை வேகமாக பரவியதையடுத்து அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

இந்த நிலையில் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அவர்கள் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இந்த விளக்கத்தில் ’அஜித் அவர்களுக்கு மூளையில் கட்டி இருப்பதாக வெளியான செய்தியில் சற்று உண்மை இல்லை என்றும், வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்தபோது காதுக்கு கீழே நரம்பு வீக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அரை மணி நேரத்தில் அதற்கான சிகிச்சை முடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நேற்று இரவு அஜித் சாதாரண வார்டு மாற்றப்பட்டார் என்றும் இன்றிரவு அல்லது நாளை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார் என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து அஜித்துக்கு மூளையில் அறுவை சிகிச்சை நடந்ததாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.