close
Choose your channels

125 தொகுதிகளுடன் முன்னிலை… சர்வே முடிவுகளில் அசத்தும் அதிமுக!

Wednesday, February 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் 125 இடங்களில் அதிமுக வெற்றிப்பெற்று ஆட்சி அமைக்கும் என தனியார் சர்வே முடிவு ஒன்று தெரிவித்து இருக்கிறது. இதனால் தமிழகத்தில் 3 ஆவது முறையாக அதிமுக ஆட்சி அமைக்கும் என்றும் அந்த சர்வே முடிவு சுட்டிக்காட்டி இருக்கிறது. தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் தீவிரம் பெற்று இருக்கிறது.

இந்நிலையில் Zion Research எனும் தனியார் சர்வே ஆய்வு முடிவு, தமிழகத்தில் அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்து இருப்பது கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக அரசின் நிர்வாக திறனுக்காக கிடைத்த விருதுகள் மற்றும் 2,500 ரூபாய் பொங்கல் பரிசு ஆகியவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கை அதிகரித்து உள்ளதாகவும் அந்த சர்வே முடிவு தெரிவித்து இருக்கிறது.

2021 இல் தமிழக சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சி அமைக்கப்போவது எந்த கட்சி என்று தமிழகம் முழுவதும் ஜியோன் ஆய்வு அமைப்பு எனும் தனியார் நிறுவனம் சர்வே நடத்தி உள்ளது. இந்த சர்வே முடிவுகள் குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழில் வெளிவந்துள்ளது. இதற்காகத் தமிழகம் முழுவதும் 58,500 பேரை நேரில் சந்தித்து இந்த சர்வே நடத்தப்பட்டு உள்ளது. இதில் அதிமுக 45% வாக்குகளை பெற்று 125 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் சர்வே முடிவுகள் தெரிவித்து உள்ளன.

அதே சமயம் 44% வாக்குகளுடன் 109 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்று எதிர்க்கட்சி வரிசையில் அமரும் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட சர்வேயில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இமேஜ் மக்களிடத்தில் பன்மடங்கு கூடியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும் முதலமைச்சர் பயன்படுத்தும் “நானும் ஒரு விவசாயி” என்பது மக்கள் மத்தியில் ஆழமாக பதித்து உள்ளதாக இந்த சர்வே சுட்டிக்காட்டி இருக்கிறது. அதோடு சமானியராக அனைவரிடமும் முதல்வர் பழகி வருவதாகவும் எளியவர் ஒருவர் முதல்வராக வந்து இருப்பதாகவும் மக்கள் தங்களது கருத்துகளை சர்வேயில் தெரிவித்து உள்ளனர். 2019 இல் நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த நிலை தற்போது முற்றிலும் மாறி மக்கள் மத்தியில் அதிமுகவின் செல்வாக்கும் மிகப் பெரிய அளவு கூடியள்ளதாக சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை அவர் திறமையுடன் சிறப்பாக நிர்வாகம் செய்து வருவதாக மக்கள் தெரிவித்து உள்ளனர். பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் வழங்கியது மக்களிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான மதிப்பை அதிகரித்து உள்ளது. மேலும் கஜா, நிவர் போன்ற இயற்கை சீற்றங்களை எதிர்கொண்டது, கொரோனாவை திறம்பட எதிர்கொண்டது ஆகியவை முதலமைச்சரின் திறமைக்கு சான்றாக தமிழக மக்கள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் மண்டல வாரியாக கட்சிகளின் வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை சென்னை, டெல்டா மற்றும் தெற்கு மண்டலங்களின் திமுகவும் முன்னிலை பெறும் என்றும் சர்வே முடிவுகள் தெரிவிக்கிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசில் மக்கள் “மிக மகிழ்ச்சி“ என்று 41% மக்களும், “மகிழ்ச்சி“ என்று 26% மக்களும் தெரிவித்து உள்ளனர். இது தமிழக அரசின் “வெற்றி நடை போடும் தமிழகம்“ என்ற பிரச்சாரத்திற்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது.

சட்டமன்றத் தேர்தலுக்குப்பின் முதலமைச்சராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு 42% பேர் ஸ்டாலின் என்றும் 41% பேர் எடப்பாடி பழனிசாமி என்றும் தெரிவித்து உள்ளனர். ஸ்டாலினுக்கு கருணாநிதியின் மகன் என்ற பின்புலமும் பிம்பமும் உள்ளது. அதுவே எந்தவொரு பின்புலமும் பிம்பமும் இல்லாமல் கட்சியின் கடைக்கோடி தொண்டனாக இருந்து முதலமைச்சராக உயர்ந்துள்ள எடப்பாடி பழனிசாமியை மக்கள் தங்களில் ஒருவராக பார்க்கின்றனர் என்பது இந்த சர்வே முடிவுகள் மூலம் புலப்படுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.