உங்கள் ஆதரவு ஊக்கம் அளிக்கிறது: கமலுக்கு சூர்யா கடிதம்

  • IndiaGlitz, [Wednesday,July 17 2019]

நடிகர் சூர்யா சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார். இந்த கருத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ, எச் ராஜா, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். அதே நேரத்தில் நாஞ்சில் சம்பத், சீமான் , கமல்ஹாசன் உள்பட பலர் சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில் தனக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன் அவர்களுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது.

வணக்கத்துக்குரிய கமல்ஹாசன் அவர்களுக்கு வணக்கம். கல்விக் கொள்கை தொடர்பான என் கருத்துக்கு வந்த எதிர்வினைகளுக்கு எதிராகவும், எனக்கு ஆதரவாகவும், குரல் எழுப்பிய தங்களுக்கும், தங்களின் மக்கள் நீதி மையம் அமைப்பிற்கும் என்னுடைய நன்றிகள். திரை உலகில் என் போன்ற பல கலைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் தங்களின் ஆதரவு, கல்விப் பணியில் தொடர்ந்து தீர்க்கமாக செயலாற்ற ஊக்கமளிக்கிறது. தங்களின் தார்மீக ஆதரவிற்கு மீண்டும் என் நன்றிகள்.

இவ்வாறு சூர்யா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.