குருதியிலேயே உறுதி கலந்து உழைப்போம்… புனித ஜார்ஜ் கோட்டையில் புதிய வரலாறு படைப்போம்… முதல்வரின் உற்சாகம் பொங்கும் பேச்சு!!!

  • IndiaGlitz, [Thursday,October 08 2020]

 

அதிமுக கட்சியின் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மற்றும் மூத்தத் தலைவர்களின் பரிந்துரையோடும் தொண்டர்களின் நல்ல ஆசியோடு அக்கட்சியின் அடுத்த முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நேற்று வெளியிடப் பட்டது. அதற்கு நன்றி கூறிய எடப்பாடி பழனிசாமி “குருதியில் உறுதி கலந்து உழைப்போம், புனித ஜார்ஜ் கோட்டையின் மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்து புதிய வரலாறு படைப்போம்” என அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

தொண்டர்கள் மத்தியில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “3 ஆவது முறையாக ஆட்சியைத் தொடர்கிற அரசியல் புரட்சியை, கழக உடன்பிறப்புகளின் ஒத்துழைப்போடு நிறைவேற்றிக் காட்டுவேன். பழி பாவங்களுக்கு அஞ்சுபவனாக, கட்சி பெருமைக்கும் புகழுக்கும் ஆசைப்படுபவனாக உழைத்து வருகிறேன். ‘உழைப்பவரே உயர்ந்தவர்’ என்பதை போதித்த புரட்சித் தலைவரின் வழிநடக்கும் கழகத்தில், உழைத்தால் உயர முடியும் என்பதற்கு நானும் ஒரு சாட்சி” என எழுச்சிப் பொங்க போசியிருக்கிறார்.

வருகிற 2021 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக கட்சியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்க இருக்கிறார். அத்தேர்தலில் அதிமுக வெற்றிப்பெறும் பட்சத்தில் மூன்றாவது தொடர்ந்து முறையாக தமிழகத்தை ஆட்சிப்புரியும் கட்சியாக அதிமுக அமையும். அந்த சாதனையைப் படைப்போம் என தமிழக முதல்வர் தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் பொங்க தெரிவித்தார்.

முதல்வரின் பேச்சுக்குறித்து கருத்து தெரிவிக்கும் சில தொண்டர்கள், விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஒருவர் முதல்வராகி தமிழகத்திற்கு நல்ல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதனால் அவர் மீது மதிப்பும் மரியாதையும் அனைவர் மத்தியிலும் கூடியுள்ளது. இதன் காரணமாக இன்று எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் அவர்கள் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார் என ஆர்ப்பரித்துக் கொண்டாடி வருகின்றனர்.