ரெஸ்ட்லிங் ஹீரோ அண்டர்டேக்கர் அதிரடி முடிவு: ரசிகர்கள் அதிர்ச்சி

  • IndiaGlitz, [Monday,June 22 2020]

WWE எனப்படும் ரெஸ்ட்லிங் போட்டிகளில் ஹீரோவாக திகழ்ந்த அண்டர்டேக்கர் எடுத்துள்ள அதிரடி முடிவால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 30 ஆண்டுகளாக ரெஸ்ட்லிங் போட்டிகளில் கொடிகட்டி பறந்தவர் அண்டர்டேக்கர். இவர் களத்தில் இறங்கிவிட்டால் இவரது அதிரடி ஆக்சனால் எதிரிகள் அடித்து நொறுக்கப்படுவார்கள். இதனால் இவருக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் குவிந்தனர். குறிப்பாக 90களின் குழந்தைகள் பலர் அண்டர்டேக்கருக்கு அடிமை என்றே சொல்லலாம்.

இந்த நிலையில் அண்டர்டேக்கர் திடீரென தான் ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ளார். அவருடைய இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை சோகத்தில் மூழ்கடித்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டில் இருந்தே ரெஸ்ட்லிங் போட்டிகளில் பங்குபெறுவதை அண்டர்டேக்கர் குறைத்து கொண்டார். இதனால் அவர் விரைவில் தனது ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அவரது ஓய்வுக்கு அவரது 55 வயது தான் காரணம் என்று கூறப்படுகிறது.

தனது ஓய்வு குறித்து அண்டர்டேக்கர் கூறியபோது, ‘இதுவரை எனக்கு பிடித்த வகையில் களத்தில் செயல்பட்டேன். அதேபோல் காலம் வந்துவிட்டதால் விலகவும் செய்கிறேன். இந்த விளையாட்டை தாண்டி எனக்கு இன்னொரு வாழ்க்கையும் உள்ளது. அந்த வாழ்க்கையை எனது மீதி நாட்களில் அனுபவிக்க போகிறேன்’ என்று கூறியுள்ளார்.

அண்டர்டேக்கர் ரெஸ்ட்லிங் போட்டியில் தான் ஆக்ரோஷமானவர். நிஜத்தில் மிக இளகிய மனம் படைத்தவர் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சமிபத்தில் நிதி திரட்டி உதவி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.