ஓடிடி ரிலீஸ்: திரையரங்கு உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு!

  • IndiaGlitz, [Thursday,September 02 2021]

ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களை திரையரங்குகளில் திரையிடுவதில்லை என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அதிரடியாக முடிவு எடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது திரைப்படங்களை ஓடிடி மற்றும் திரையரங்குகள் ஆகிய இரண்டிலும் விற்பனை செய்து தயாரிப்பாளர்கள் லாபம் பார்த்து வருகின்றனர். பல திரைப்படங்கள் திரையரங்குகளுக்கு வராமலேயே நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னணி நடிகர்களின் படங்களும் இதில் அடங்கும்.

இந்த நிலையில் ஓடிடியில் வெளியான படங்களை திரை அரங்குகளில் வெளியிடுவது இல்லை என திரையரங்கு உரிமையாளர்கள் அதிரடியாக முடிவெடுத்துள்ளனர். அதேபோல் ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கு பிரிமியர் காட்சிக்கும் திரையரங்குகள் வழங்குவதில்லை என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.

திரையரங்குகளில் வெளியாகி நான்கு வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியாகும் படங்களை மட்டுமே திரையரங்குகளில் திரையிடுவோம் என்றும் தெரிவித்துள்ள திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், ஓடிடிக்கு என தனியாக படங்களைத் தயாரித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஓடிடி குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.