விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்த 3 தமிழர்களின் நிலை என்ன?

நேற்று இரவு கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளாகி இரண்டாக பிளந்ததால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விமான விபத்தில் இதுவரை 19 பேர் பலியாகி உள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த நிலையில் இந்த விமானத்தில் பயணம் செய்த மூன்று தமிழர்களின் நிலை என்ன என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்றும், அதில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பயணிகள் பயணம் செய்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது

தமிழ் நாட்டைச் சேர்ந்த ஃபைசல் என்பவரின் மனைவி ஷானிஷா மற்றும் அவரது 5 வயது மகன் முகமது ஜிடான் ஆகிய இருவர் இந்த விமானத்தில் பயணம் செய்ததாகவும், மேலும், நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவர் பயணம் செய்ததாகவும் இந்த விமானத்தில் பயணம் செய்த மூன்று தமிழர்களும் பாதுகாப்பாக உள்ளதாகவும் மலப்புரம் மாவட்ட ஆட்சியர் கோபாலகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.