ஒபிஎஸ்-முன்னாள் டிஜிபி திலகவதி சந்திப்பு. ஆர்.கே.நகர் வேட்பாளரா?

  • IndiaGlitz, [Saturday,March 11 2017]

தமிழகத்தின் முதல் ஐபிஎஸ் அதிகாரியும், முன்னாள் டிஜிபியுமான திலகவதி நேற்று இரவு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்களை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் ஒருசில நிமிடங்கள் நீடித்ததாகவும், இருவரும் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது.

மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படினும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் இந்த சந்திப்பு நடந்துள்ளதால் ஓபிஎஸ் அணியின் சார்பில் வேட்பாளராக திலகவதி நிறுத்தப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே முன்னாள் காவல்துறை அதிகாரி நட்ராஜ் மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏவாக பணியாற்றி வரும் நிலையில் முன்னாள் டிஜிபியும், நேர்மையான அதிகாரியாக பணியாற்றிவருமான திலகவதியும் எம்.எல்.ஏ ஆகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று பலர் சமூக வலைத்தளங்கள் மூலம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பொதுமக்களின் கோரிக்கை நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.