ஆரணியில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்த அவலம்!

  • IndiaGlitz, [Saturday,September 11 2021]

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பேருந்து அருகே உள்ள 7 ஸ்டார் அசைவ உணவகம் ஒன்றில் கடந்த புதன்கிழமை இரவு சிக்கன் தந்தூரி, மட்டன், பிரியாணி உள்ளிட்ட உணவுகளை உட்கொண்ட 10 வயது சிறுமி லோசிகா உயிரிழந்துள்ளார். மேலும் இதே உணவகத்தில் உணவருந்திய 40 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அம்ஜத் பாட்ஷா என்பவர் நடத்தி வந்த 7 ஸ்டார் உணவகத்தில் கடந்த புதன் கிழமை உணவருந்திய சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவரைத் தவிர அந்த உணவகத்தில் சிக்கன் தந்தூரி, மட்டன், பிரியாணி போன்ற உணவுகளை சாப்பிட்ட 40 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு அவர்கள் ஆரணி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் அந்த ஹோட்டலுக்கு சீல் வைத்த அதிகாரிகள் உரிமையாளர் அம்ஜத் பாட்ஷா மற்றும் சமையல் மாஸ்டர் முனியாண்டி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் இவர்கள்மீது 284, 337, 304A ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் சீல் வைக்கப்பட்ட உணவகத்தில் உள்ள பதப்படுத்தப்படுத்தும் பெட்டியில் இருந்து 15 கிலோவிற்கும் மேற்பட்ட கெட்டுப்போன மாமிசத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து அவற்றை அப்புறப்படுத்தி உள்ளனர். இந்தச் சம்பவத்தையடுத்து ஆரணி பகுதியில் செயல்பட்டு வரும் அனைத்து ஹோட்டல்களிலும் என்ன வகையான மாமிசம் பயன்படுத்தப்படுகிறது? அவற்றின் தரம் என்ன என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.