வழக்கு வந்தால் ஓடி ஒளிந்து கொள்வார் எஸ்.வி.சேகர்: முதலமைச்சர் பழனிசாமி

கடந்த இரண்டு நாட்களாக நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர், அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்வதும், அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்து வருவதுமான செய்திகள் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக இடம் பெற்று வருகின்றன.

இந்த நிலையில் இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், ‘எஸ்வி சேகர் ஏதாவது பேசி விட்டு வழக்கு என்று வந்தால் ஓடி ஒளிந்து கொள்வார் என்றும் அவர் பேசுவதற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார்.

மேலும் ’எங்களுக்கு ஹிந்தி தெரியும் என்பது எஸ்வி சேகருக்கு எப்படி தெரியும் என்று கேள்வி எழுப்பிய முதல்வர், ‘அவர் முதலில் எந்த கட்சியில் இருக்கிறார் என்றே தெரியவில்லை என்றும், அவர் அதிமுகவில் இருந்தபோது நாங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் போது அவர் எப்போதும் வந்ததே இல்லை என்றும் தெரிவித்தார்.

ஏதாவது கருத்து சொல்லிவிட்டு வழக்கு வந்தால் ஓடி ஒளிந்துகொள்ளும் எஸ்வி சேகருக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று முதல்வர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.