அதிகாலை சிறப்புக்காட்சி குறித்து அமைச்சரின் அதிரடி டுவீட்

  • IndiaGlitz, [Wednesday,October 23 2019]

விஜய் நடித்த ‘பிகில்’ மற்றும் கார்த்தி நடித்த ‘கைதி’ ஆகிய திரைப்படங்கள் வரும் 25ஆம் தேதி தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ள நிலையில் இந்த இரு படங்களுக்கும் சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து இருபட தயாரிப்பு நிறுவனங்களும் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளன. இதனையடுத்து அதிகாலை காட்சிக்கு அனுமதி கிடைத்துவிடும் என்றே கருதப்பட்டது.

இந்த நிலையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்கள் சற்றுமுன் தனது டுவிட்டரில் ஒரு டுவீட்டை அதிரடியாக பதிவு செய்துள்ளார். அதில், ‘சிறப்புக் காட்சிகளை ரத்து செய்யக் கூறி அறிக்கை அனுப்பப்பட்டுவிட்டது என்றும், முன்பதிவு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அதிக கட்டணம் வசூலிப்பது கட்டுப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார். 

இதனையடுத்து ‘பிகில்’, ‘கைதி’ திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சி அனுமதி இல்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இனி தயாரிப்பு நிறுவனங்கள் நேரடியாக முதல்வருக்கு வேண்டுகோள் வைப்பார்களா? அல்லது அவர்களது அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.