சினிமாவையே மிஞ்சிய சம்பவம்… ஏமாற்றிய காதலன் மீது ஆசிட் வீசிய இளம்பெண்!!!

  • IndiaGlitz, [Thursday,October 29 2020]

 

திரிபுரா மாநிலத்தில் தன்னை ஏமாற்றிய காதலன் மீது இளம்பெண் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கோவாய் மாவட்டம் பெல்சேரா எனும் பகுதியில் வசித்து வந்த சவுமென் சந்தல் (30) எனும் இளைஞர் மீது பினட்டா சந்தல் (27) எனும் இளம்பெண் ஆசிட் வீசியதாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சவுமென் தற்போது மூக்கு, கண் மற்றும் சுவாசக்குழாய் பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

இதுகுறித்து போலீசார் பினட்டாவிடம் விசாரணை செய்தபோது, நானும் சவுமெனும் பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வருகிறோம். நான் 8 ஆம் வகுப்பு படிக்கும் போதே பல இடங்களில் பாத்திரங்களைத் தேய்த்து அந்தப் பணத்தை சவுமெனுக்கு கொடுத்து வந்தேன். இந்நிலையில் 12 ஆம் வகுப்பு முடித்த பிறகும் அவர் மேற்படிப்பை தொடர முடியாமல் தவித்து வந்தார். அப்போதும் நான்தான் அவருக்கு உதவி செய்தேன். இந்நிலையில் கடந்த 2018 இல் படிப்பை முடித்தப் பின் சவுமென் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார்.

ஆனால் வேலைக்குச் செல்லத் தொடங்கியதில் இருந்து என்னிடம் பேசுவதை தவிர்த்து விட்டார். மேலும் தற்போது வேறு ஒரு பெண்ணுடன் பழகி வருகிறார். இதை அறிந்த எனக்கு கடும் கோபம் ஏற்பட்டது அதனால் சவுமென் முகத்தில் ஆசிட்டை வீசிவிட்டேன் எனக் கூறியிருக்கிறார். இதைக்கேட்ட போலீசார் பினட்டாவை கைது செய்து நீதிமன்றத்தில ஆஜர் படுத்தி இருக்கின்றனர். இதனால் அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.