கடைசியாக சித்ராவிடம் பேசியது என்ன? டிவி நடிகை சரண்யா பேட்டி!

சின்னத்திரை நடிகை சித்ரா இன்று அதிகாலை திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது சின்ன திரையுலகிற்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. அவரது தற்கொலையை இன்னும் நம்ப முடியாமல் பலர் இது பொய்யாக இருக்க கூடாதா என்று பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு படப்பிடிப்பின் போது அவரிடம் கடைசியாக நேரிலும் போனிலும் பேசிய உடன் நடிக்கும் நடிகையான சரண்யா நமக்கு பிரத்தியேக பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:

சித்ரா சாதாரணமாக இந்த இடத்தைப் பிடிக்கவில்லை. ஆரம்பத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு சின்ன சின்ன கேரக்டர் செய்து அதன் பிறகுதான் தற்போது தான் ஒரு நல்ல இடத்திற்கு வந்துள்ளார். அவர் கஷ்டப்பட்ட போதெல்லாம் மன தைரியத்துடன் இருந்தவர். இன்றைக்கு அவர் எல்லா வசதிகளை பெற்ற பிறகு தற்கொலை செய்து கொண்டதை எங்களால் நம்பவே முடியவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் சித்ராவின் மரணம் தற்கொலையையும் தாண்டி வேறு ஏதாவது இருக்குமா என்று எனக்கு என்ன தோன்றவில்லை. ஏனெனில் அவர் கடைசியாக யாரிடம் பேசினார்? அவரது அறையில் என்ன நடந்தது என்பது நமக்கு தெரியாது. நாம் அந்த அறையில் இல்லை. எனவே யார் மீதும் நான் பழி சுமத்த விரும்பவில்லை. முழுமையான விசாரணையில் தான் அவரது மரணத்திற்கு என்ன காரணம் என்பது தெரியவரும் என்று கூறினார்.

நான் பார்த்தவரையில் இதுவரைக்கும் சித்ரா கோபப்பட்டதே இல்லை. கோபம் வந்தால் கூட அதை உள்ளுக்குள்ளேயே அடக்கி கொண்டு வெளியே சிரித்துக் கொண்டுதான் இருப்பார். இன்று காலை 6 மணிக்கு சித்ரா இறந்துவிட்டார் என்ற செய்தியை நான் தொலைக்காட்சியில் பார்த்த போது முதலில் நம்பவில்லை. யாராவது வதந்தி கிளப்பி இருப்பார்கள் என்று தான் எண்ணினேன். உடனே நான் அவருக்கு போன் செய்தபோது அவர் போன் எடுக்கவில்லை. அதன் பிறகு அடுத்தடுத்து செய்திகள் வந்தபோதுதான் அவர் இறந்து விட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

ஒருவேளை சித்ராவின் மரணம் தற்கொலையாக இல்லாமல் வேறு ஏதாவது ஆக இருந்தால் கண்டிப்பாக அவருக்கு நியாயம் கிடைக்க நானும் குரல் கொடுப்பேன் என்றும் சரண்யா தெரிவித்தார்.