ஒரு படுக்கைக்கு 50 நோயாளிகள் வரிசைக்கட்டி நிற்கும் அவலம்… என்ன நடக்கிறது உ.பி.யில்?

  • IndiaGlitz, [Wednesday,April 21 2021]

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலையால் பல வட மாநிலங்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. இதனால் மருத்துவமனைகளில் போதிய இருக்கை வசதி இல்லாமல் இருப்பதோடு பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையும் நிலவி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தின் லக்னோ பகுதியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு இடம் இல்லை என்று அறிவிப்பு பலகையும் தொங்கவிடப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. காரணம் லக்னோவை ஒட்டியுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளுக்கு ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒவ்வொரு கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனை படுக்கைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன.

இதையடுத்து லக்னோவை ஒட்டியுள்ள மாவட்ட மருத்துவமனைகளுக்குச் செல்லும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து இருக்கிறது. மேலும் அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா நோயாளிகளை 3 வகையாகப் பரித்து ஆக்சிஜன் தேவைப்படும் லெவல் 2 நோயாளிகளைக் கூட வீட்டிலேயே இருக்குமாறும் சில மருத்துவமனைகள் பரிந்துரைத்து வருகிறதாம். அதோடு அறிகுறிகள் குறைந்து இருக்கும் லெவல் 1 கொரோனா நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளவும் பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் லெவல் 3 வென்டிலேட்டர் வசதி தேவைப்படும் கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே மருத்துவமனையில் அனுமதி வழங்கப்படுகிறது. இப்படி இருக்கும்போது லக்னோ ஒட்டியுள்ள பல்வேறு பகுதிகளில் தற்போது கொரோனா நோயாளிகள் படுக்கை வசதி இன்றி ஒவ்வொரு மருத்துவமனை வாயிலிலும் நிரம்பி வழியும் அவலம் ஏற்பட்டு இருக்கிறது. இதைத்தவிர மருத்துவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு விட்டால் அவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டுமே என்ற கட்டாயத்திலும் அம்மாநில அரசு கடும் சிக்கலை சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.