கர்ப்பிணி பெண்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்… சுகாதாரத்துறை தகவல்!

கர்ப்பிணி பெண்களும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என மத்தியச் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் டாக்டர் பல்ராம் பார்கவா, கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு இருக்கிறது. எனவே கர்ப்பிணிப் பெண்களும் இனி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்

மேலும் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. அதற்கான முடிவுகள் வரும் செப்டம்பரில் வெளியாகும் எனவும் கூறியுள்ளார். இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் கொரோனா தடுப்பூசிகள் இரண்டும் இந்தியாவில் செலுத்தப்பட்டு வருகின்றன. இதில் தற்போது வரை 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

முன்னதாக கர்ப்பிணி பெண்கள் மீது கொரோனா தடுப்பூசி பரிசோதனைகள் நடத்தப்படவில்லை. இதனால் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து எந்த பரிந்துரையையும் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிடாமல் இருந்து வந்தது. தற்போது கர்ப்பிணி பெண்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் இதுவரை 25.37 கோடி பேருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியும் 5.42 கோடி பேருக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.