ஒரே டுவிட்டில் மூன்று பிரச்சனைகளுக்கும் கண்டனம் தெரிவித்த வைரமுத்து!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பிரச்சனையையும் மீறி மூன்று பிரச்சனைகள் ஊடகங்களின் தலைப்பு செய்திகளாகி வருகின்றன. ஒன்று சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து திருக்குறள் நீக்கப்பட்டதாக வெளிவந்த தகவல். ராணுவத்தினர் மத்தியில் பேசும்போது திருக்குறளை மேற்கோள் காட்டி பேசும் பிரதமர், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து திருக்குறள் நீக்கப்படுவதை எப்படி அனுமதிக்கின்றார் என்பதே தமிழ் ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.

அடுத்ததாக சமீபத்தில் கந்தசஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருப்பர் கூட்டம் குறித்த பிரச்சனை. இந்த பிரச்சனையில் ஒருசில முக்கிய தலைவர்கள் தவிர கிட்டத்தட்ட அனைத்து அரசியல் தலைவர்களும் பெரும்பாலான திரையுலக பிரபலங்களும் கண்டனக்குரல்களை எழுப்பியுள்ளனர்.

அதேபோல் மூன்றாவது பிரச்சனையாக பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரம். கந்தசஷ்டி கவசம் பிரச்சனைக்கு பொங்காத அரசியல் தலைவர்கள் கூட பெரியார் சிலை விவகாரத்திற்காக பொங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் கவியரசு வைரமுத்து இந்த மூன்று பிரச்சனைகளுக்கும் ஆறே வரி கவிதை ஒன்றின் மூலம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

திருக்குறள் மேற்கோள் காட்டப்படுவதைப்
பாராட்டும் எங்களால் திருக்குறள் நீக்கப்படுவதை
ஏற்றுக்கொள்ள முடியாது.

பெரியார் இழிவு செய்யப்படுவதைச்
சகிக்க முடியாத எங்களால் முருகன் அடியார்கள்
காயப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

கவியரசு வைரமுத்துவின் இந்த பதிவுக்கு நெட்டிசன்களின் பாராட்டுக்களும் வழக்கம்போல் சிலரின் எதிர்ப்புகளும் பதிவாகி வருகிறது.