close
Choose your channels

"நாட்படு தேறல்" 100 பாடல்கள்...முதல் பாடலின் வரிகளை பதிவிட்ட வைரமுத்து...! குவியும் பாராட்டுக்கள்....!

Friday, April 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கவிஞர் வைரமுத்து அவர்கள் "நாட்படு தேறல்" என்ற தலைப்பில், நூறு பாடல்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று டுவிட்டரில் முதல் பாடலின் வரிகளை வெளியிட்டுள்ளார்.

கவிப்பேரரசு அவர்கள் எழுதுகின்ற நூறு பாடல்களை, 100 இயக்குனர்கள் இயக்கி, 100 இசையமைப்பாளர்கள் இசையமைத்து, 100 பாடகர்களை கொண்டு பாடப்பட்டு பாடல்கள் உருவாக்கப்பட உள்ளது. இதன் முதல் முயற்சியாக வைரமுத்து அவர்கள் முதல்பாடலின் பாடல் வரிகளை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்பாடலானது வரும் 18-ஆம் தேதியன்று இசையருவி மற்றும் கலைஞர் சேனல்களில் ஒளிபரப்பாக உள்ளது. "நாட்படு தேறல்" என்ற தலைப்பின் கீழ், வாரம் ஒரு பாடல் வெளிவர உள்ளது.

சமீபத்தில் தான் இத்தொகுப்பின் தலைப்பு பாடல் வெளியானது, இப்பாடலை ஜெரார்ட் ஃபெலிக்ஸ் இசையமைக்க, ஷங்கர் மகாதேவன் பாட, கார்த்திகேயன் இயக்கியிருந்தார்.

இதைத்தொடர்ந்து வைரமுத்து அவர்கள் "நாக்குச்செவந்தவரே" என்ற தலைப்பில், முதல் பாடலின் வரிகளை இன்று வெளியிட்டுள்ளார். இந்தப்பாடலை பிரபல இயக்குனரான கிருத்திகா உதயநிதி இயக்க, வாகு சமான் என்ற இசையமைப்பாளர் இசையமைத்து பாடியுள்ளார்.

அவர் வெளியிட்டு பாடல்வரிகள்,
"நாக்கு செவந்தவரே
நாலெழுத்து மந்திரியே
மூக்கு னெடச்சவரே
முன்வழுக்கை மன்னவரே
கூத்து முடிஞ்சிருச்சு
கொமரிப்புள்ள எதுக்குன்னு
மாத்தும் பாக்காமப்
பரபரன்னு போறீரோ !
ஒருவாய் வெத்தலைய
இருவாய் உண்டகதை
திருவாய் மறந்தாலும்
தின்னருசி மறந்திருமோ?
வைக்கப் போர்ப் படப்புக்கு
வடஇருட்டு மூலையில
அக்கப்போர் செஞ்சகதை
அய்யனுக்கு மறந்திருச்சோ ?
சவரக் கத்திக்குத்
தப்பிச்ச குறுமுடியில்
முகர ஒரசுனது
முழுசாத்தான் மறந்திருச்சோ ?
மொட்டு மொட்டு மல்லிகையை
முட்டிமுட்டித் தட்டிவிட்டு
முத்துமுத்து வேர்வைச் சொட்டு
மோந்தகதை மறந்திருச்சோ ?
வாழைத் தோப்புக்குள்ள
வளவி ஒடச்சகதை
வாழை மறந்திருக்கும்
வலதுகையி மறந்திருமோ ?
தேனேறிப் போயிருந்த
சிறுக்கிமக தலைமயிரு
பேனேறிப் போனதய்யா
பேச்சுவார்த்தை இல்லாம
புள்ளித் தேமலுக்கும்
புதுவேட்டி மடிப்புக்கும்
கருப்பட்டி ஒதட்டுக்கும்
கருத்தகிளி அலையுதய்யா
ஆறசரம் சங்கிலியோ
அட்டிகையோ கேக்கலையே
மஞ்சக் கயித்துக்கு
மனசுக்குள்ள அரிக்குதய்யா
ஆம்பளைக சகவாசம்
அடுத்தொருத்தி வாரவரைக்கும்
பொம்பளைக சகவாசம் புதைகாடு போறவரைக்கும்"

ரசிகர்கள் பலரும் கவிஞரின் வரிகளுக்கு நன்றி கூறி, காணொளிக்காக காத்திருக்கிறோம் ஐயா எனக்கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.