close
Choose your channels

பட்டாசு கடை விபத்தில் மகன்களைப் பறிக்கொடுத்த தாய்… ரயில் முன்பாய்ந்த பரிதாபம்!

Wednesday, April 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூர் மாவட்டத்தில் இயங்கி வந்த பட்டாசுக் கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு அந்த விபத்தில் கடையின் உரிமையாளர் மோகன் என்பவர் தனது 2 பேரக் குழந்தைகளுடன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தை அடுத்து 2 மகன்களையும் விபத்தில் இழந்துவிட்ட தாய் (வித்யா 34) இன்றுகாலை ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் பார்ப்போரை கண்கலங்க வைத்து இருக்கிறது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியில் பட்டாசு கடை நடத்தி வந்தவர் மோகன்(60). இந்தக் கடைக்கு கடந்த 18 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு 2 பேர் பட்டாசு வாங்க வந்துள்ளனர். வந்தவர்கள் பட்டாசு எப்படி வெடிக்கிறது என்பதை சோதனை செய்து பார்க்க விரும்புவதாகத் தெரிவித்து உள்ளனர். இதனால் கடையின் உரிமையாளர் மோகனும் அவர்களுக்கு சில பட்டாசுகளைக் கொடுத்து உள்ளார். இந்தப் பட்டாசுகளைப் பெற்றுக் கொண்ட அந்த வாடிக்கையாளர்கள் இருவரும் கடைக்கு முன்பே பட்டாசுகளை வைத்து வெடிக்க செய்துள்ளனர்.

இதனால் பட்டாசில் இருந்து சிதறிய தீ, பட்டாசு கடையின் மீது பட்டு இருக்கிறது. இதையடுத்து கடையில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் சிறிது நேரத்திலேயே வெடிக்க ஆரம்பித்து இருக்கின்றன. இதைப்பார்த்த மோகன் கடைக்கு உள்ளே இருந்த தனது பேரக்குழந்தைகளைக் காப்பாற்ற கடைக்குள் சென்றார். ஆனால் தீ மளமளவென பற்றியதால் கடையில் இருந்த அனைத்துப் பட்டாசுகளும் வெடித்து கடை உரிமையாளர் மோகன், அவரது பேரக்குழந்தைகள் தனுஷ் (8), தேஜஸ் (7) ஆகிய மூவரும் உயிரிழந்து உள்ளனர்.

இதையடுத்து குழந்தைகளைப் பறிக்கொடுத்த தாய் வித்யா கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். ஒரே நேரத்தில் தனது தந்தை மற்றும் குழந்தைகளை இழந்த அவர் விரக்தியில் இன்று காலை ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் வேலூர் பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் தாய் வித்யா கணவரை விட்டு பிரிந்து தனது மகன்களுடன் தந்தை வீட்டிலேயே வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.