சிம்புவின் 'மாநாடு' ரிலீஸ் எப்போது? வெங்கட்பிரபு தகவல்!

  • IndiaGlitz, [Saturday,March 06 2021]

சிம்பு நடித்துவரும் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதால் சிம்புவின் ரசிகர்கள் பரபரப்பில் உள்ளனர்.

இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த ‘மாநாடு’ படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் கூறியதாவது: ‘மாநாடு’ படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளோம். பன்னிரண்டு முதல் பதினைந்து நாட்களில் அந்த படப்பிடிப்பை முடித்து விடுவோம். மிகப் பெரிய கூட்டத்துடன் கூடிய படப்பிடிப்பு என்பதால் அதற்காக எங்களை நாங்கள் தயார் படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்த படப்பிடிப்பு முடிந்தவுடன் ‘மாநாடு’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பை வெளியிடுவோம் என்று கூறியுள்ளார்.

மேலும் அஜித் நடித்து வரும் ’வலிமை’ படத்தின் அப்டேட்டை அஜித்தின் ரசிகர்களை போல் நானும் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றேன் என்று வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.

சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் இந்த திரைப்படத்தில் ஜோடியாக பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்த ஆண்டின் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்த கூடிய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.