ஊரடங்கு நேரத்தில் வீடு இல்லாதவர்கள் எங்கே செல்வது? உண்மையை உடைக்கும் வீடியோ!

  • IndiaGlitz, [Friday,April 23 2021]

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை கடும் பீதியை கிளப்பி வருகிறது. இதனால் கடந்த சில வாரங்களாகப் பல மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது. அதிலும் டெல்லியில் முழுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருந்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பினால் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இதில் ஆக்சிஜன் பற்றாக்குறை வேறு, கொரோனா நோயாளிகளை கடும் பதற்றத்தில் ஆழ்த்தி வருகிறது.

இதுபோன்ற நிலைமைகளில் வீடு இல்லாமல் தெருக்களிலும் சாலைகளிலும் வாழ்க்கை நடத்தி வரும் சாதாரண மனிதர்களின் நிலைமை குறித்து பெரும் கேள்வி முன்வைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி  இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது இதுபோன்ற கேள்விகளை ஊடகங்கள் கிளப்பி இருந்தன. இந்த கேள்விகளுக்கு பதில் அளித்த பல மாநில அரசுகள் கொரோனா நேரத்தில் பேரிடர் மேலாண்மைச் சட்டங்கள் அமலுக்குக் கொண்டு வரப்படும்.

எனவே வீடு இல்லாதவர்களுக்கு ஆங்காங்கே தங்குவதற்கு ஏற்ப முகாம்கள் அமைத்துக் கொடுக்கப்படும் எனக் கூறப்பட்டு இருந்தது. அதையொட்டி தமிழகத்திலும் ஒருசில இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு அந்த முகாம்களில் வீடு இல்லாத மக்கள் தங்கவைக்கப்பட்டனர். ஆனாலும் தொடர்ந்து சாலைகள், சென்னை போன்ற பெருநகரங்களில் கடற்கரை ஒட்டிய பகுதிகள் மற்றும் ரயில்வே ஸ்டேஷன்களிலும் தங்குவோரின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை.

இந்நிலையில் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வந்து இருக்கிறது. இந்த விதிமுறைகளை ஒட்டி இரவு 10 மணிக்குமேல் யாரும் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டு உள்ளது. ஆனால் வீடு இல்லாதவர்கள் இதுபோன்ற நிலைமைகளில் என்ன செய்வார்கள்? அவர்களின் நிலைமை என்ன? அரசு இவர்களுக்காக என்ன நடவடிக்கை செய்து இருக்கிறது? இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக பிரத்யேக வீடியோ எடுக்கப்பட்டு உள்ளது. இந்த வீடியோ வீடு இல்லாதவர்களின் நிலைமை குறித்து நேரடியான பதிவுகளை காட்சிப்படுத்தி இருக்கிறது. மேலும் சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோ தற்போது கவனம் பெற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது.