150 தினக்கூலி தொழிலாளர்களுக்கு விஜய் ரசிகர்களின் மகத்தான உதவி!

தமிழகமாக இருந்தாலும், தமிழகத்தின் அண்டை மாநிலங்களாக இருந்தாலும் இயற்கை பேரிடர் நேரிடும்போது முதல் நபராக விஜய் ரசிகர்கள் உதவுவார்கள் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

குறிப்பாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் ஆரம்பித்ததிலிருந்து ஆங்காங்கே விஜய் ரசிகர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட நெல்லையில் உள்ள காவல்துறையினருக்கு வாட்டர் பாட்டில், பிஸ்கட் ஆகியவற்றை நெல்லை பகுதி தளபதி விஜய்யின் ரசிகர்கள் கொடுத்தனர் என்பதும் இதற்கு நெல்லை போலீஸ் துணை கமிஷனர் தனது சமூக வலைத்தளத்தில் நன்றி தெரிவித்து இருந்தார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் வட சென்னையில் உள்ள தளபதி விஜய்யின் ரசிகர்கள் தற்போது அந்த பகுதியில் வாழும் தின கூலி தொழிலாளர்கள் 150 பேர்களுக்கு தலா 25 கிலோ அரிசியை நன்கொடையாக வழங்கி உள்ளனர். இதனால் அந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் கிட்டத்தட்ட ஒரு மாதம் பசியை போக்கி கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய்யின் இந்த மகத்தான உதவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தளபதி விஜய்யின் ரசிகர்களைப் போலவே மற்ற மாஸ் நடிகர்களின் ரசிகர்களும் தங்களால் முடிந்த உதவியை குடும்பத்தோடு பசியுடன் இருக்கும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.