சூப்பர் சிங்கர் டைட்டில்: அனு, முத்துச்சிற்பி ஏமாற்றம், பரத்துக்கு இன்ப அதிர்ச்சி!

  • IndiaGlitz, [Monday,September 27 2021]

விஜய் டிவியில் கடந்த சில வாரங்களாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நடைபெற்று வந்த நிலையில் நேற்று இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டி நடைபெற்றது. இறுதிப்போட்டியில் முத்து சிற்பி, அனு, ஸ்ரீதர்சேனா, பரத், மானஸா மற்றும் அபிலாஷ் ஆகிய 6 பேர் பங்கேற்றனர். இதனை அடுத்து இந்த ஆறு பேரில் டைட்டில் வின்னர் பட்டம் வெல்பவர் யார் என்பதை மிகுந்த ஆவலுடன் ரசிகர்கள் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 3-வது இடம் அபிலாஷ்க்கு அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் நெகழ்ச்சியுடன் தனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இந்த நிலையில் சூப்பர் சிங்கர் டைட்டில் பட்டம் அனு அல்லது முத்துசிற்ப்பி ஆகிய இருவரில் ஒருவருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென ஸ்ரீதர்சேனா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் போட்டியில் இருந்து ஸ்ரீதர்சேனா வெளியேற்றப்பட்டதால் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்து, நடுவர்கள் மீது தங்களது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வைல்ட் கார்டு எண்ட்ரியில் மிகவும் சிறப்பாக பாடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற ஸ்ரீதர்சேனா, தற்போது டைட்டில் பட்டத்தையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து இரண்டாவது இடத்திற்கான போட்டியாளர் குறித்த அறிவிப்பில் பரத் பெயர் அறிவிக்கப்பட்டதால், பரத் இன்ப அதிர்ச்சி அடைந்தார். அவர் நெகிழ்ச்சியுடன் தனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி என்றும் தன்னை ஊக்குவித்த தனது அப்பா அம்மாவுக்கு நன்றி என்றும் அவர் தெரிவித்தார்.

சூப்பர் சிங்கர் டைட்டில் பட்டம் வெல்வார் என்று எதிர்பார்த்த முத்துச்சிற்பி மற்றும் அனு ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.