அடுத்த தேர்தல் வெற்றி குறித்த கேள்விக்கு பதில் அளித்த விஜய் வசந்த்!

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்தத் தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் எம்பியாக இருந்த வசந்தகுமார் அவர்கள் எதிர்பாராத நிலையில் காலமாகி விட்டதை அடுத்து இந்த இடைத்தேர்தல் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வசந்தகுமாரின் மகனும் நடிகருமான விஜய்வசந்த் போட்டியிட்டார். அவரை எதிர்த்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கன்னியாகுமரி மக்களவை தேர்தலில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் வசந்த் வெற்றி பெற்றார். அவருக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை குவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்ற பின்னர் விஜய் வசந்த் தனது சமூக வலைத்தளத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து டுவிட் ஒன்றை பதிவு செய்தார். அந்த டுவிட்டில் அவர் கூறியதாவது: என் மீது அன்பும் பாசமும் பொழிந்த குமரி மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. வெற்றிக்காக உழைத்த காங்கிரஸ் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் எனது நன்றி. இந்த வெற்றியை வீதிக்கு வந்து கொண்டாடாமல் வீட்டிலிருந்தே கொண்டாடும் படி கேட்டுக்கொள்கிறேன்.

இந்த ட்விட்டுக்கு கமெண்ட் அளித்த நெட்டிசன் ஒருவர், ‘அடுத்த எலக்சன்லயும் வின் பண்ணனும் நினைச்சிங்கனா தொகுதி பக்கம் அப்பப்ப தலைய காட்டுங்க ப்ரோ’ என்று பதிவு செய்திருந்தார். அதற்கு பதிலளித்த விஜய் வசந்த் ’அப்பப்ப இல்ல எப்பவுமே தொகுதி பக்கம் தான் இருக்க போகிறேன், இது அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அல்ல, இந்த தேர்தலில் நீங்கள் என் மேல் வைத்த நம்பிக்கைக்கு’ என்று பதில் வைத்துள்ளார். விஜய் வசந்தின் இந்த பதிலுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.