கொரோனாவால் உயிரிழந்த நர்ஸ் உடலை புதைக்க எதிர்ப்பு: 2 மணி நேரமாக தவிக்கும் உறவினர்கள்

அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த நர்ஸ் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் அவரது உடலை புதைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் உறவினர்கள் இரண்டு மணி நேரமாக தவித்து வருவதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஏற்கனவே சென்னை உள்பட பல நகரங்களில் கொரோனாவால் உயிரிழந்த டாக்டர்கள் நர்சுகள் உட்பட பலரை உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவங்கள் குறித்த செய்திகள் வெளியானது

இந்த நிலையில் ஆற்காடு அரசு மருத்துவமனையில் பணியாற்றிய ராணிப்பேட்டையை சேர்ந்த நர்ஸ் அர்ச்சனா என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்

இந்த நிலையில் உயிரிழந்த நர்ஸ் அர்ச்சனாவின் உடலை புதைக்க அவரது உறவினர்கள் முயன்றபோது அதற்கு அந்த கிராமத்து மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நர்ஸ் உடலை அடக்கம் செய்யவிடாமல் பொதுமக்கள் தடுத்ததால் சடலத்துடன் உறவினர்கள் கடந்த இரண்டு மணி நேரமாக தவித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பொதுமக்களை கொரோனாவில் இருந்து பாதுகாப்பதற்காக தனது உயிரையும் பொருட்படுத்தாமல் நர்சாக பணிபுரிந்து ஒருவரின் உடலை அந்த கிராமத்து மக்களே அடக்கம் செய்யவிடாமல் எதிர்ப்பு தெரிவித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது