ஆன்லைனில் வகுப்பில் சிறுவர்கள் படும்பாடு!!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!!

  • IndiaGlitz, [Wednesday,August 12 2020]

கொரோனா பரவல் காரணமாக இந்தியா உட்பட உலகின் ஒட்டுமொத்த நாடுகளிலும் தற்போது பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கிறது. ஆனாலும் 2020 கல்வியாண்டின் பாடத்திட்டங்கள் குறித்து கவலைப்படும் பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் தற்போது ஆன்லைனில் வகுப்புகளை நடத்த ஆரம்பித்து இருக்கின்றன. இந்தியா போன்ற சில வளரும் நாடுகளில் ஆன்லைன் வகுப்புகள் சரிபட்டு வருமா என்ற கேள்வியும் தற்போது முன்வைக்கப் படுகிறது. அதிலும் சிறுவர்களின் மனநிலை எப்படியிருக்குமோ என்ற சந்தேகமும் எழுப்பப்படுகிறது.

இந்நிலையில் ஆன்லைனில் வகுப்புகளில் சிறுவர்கள் செய்யும் சேட்டைகள் அவ்வபோது சமூக இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அந்தவகையில் தற்போது கிராமெக்டோவெல் என்ற பெண் ஆசிரியர் ஒருவர் தனது ஆன்லைன் வகுப்புகள் குறித்த பதிவுகளை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். தனது 40 நிமிட வகுப்பில் பல மாணவர்களின் மனநிலை இதுதான் என்று உதாரணத்திற்கு ஒரு புகைப்படத்தையும் அவர் பதிவிட்டு இருக்கிறார்.

அந்தப் புகைப்படத்தில் ஒரு சிறுவன் வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே தனது இருக்கையில் அப்படியே சரிந்து விழுந்து தூங்கிவிடுகிறான். இந்த ஆன்லைன் வகுப்பு எந்த நாட்டில் நடைபெற்றது என்பது குறித்த விவரங்கள் எதுவும் வெளியாக வில்லை என்றாலும் தற்போது உலகத்திலுள்ள அனைத்து நாடுகளுக்கும் இது பொருந்தும் எனப் பலரும் இணையத்தில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். “இதுதான் 2020 சிறுவர்களின் மனநிலை” எனவும் இந்தப் புகைப்படத்தைக் குறித்து விமர்சனம் எழுப்பி வருகின்றனர்.