முதல்வருடன் விஷால் உள்பட முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு

  • IndiaGlitz, [Friday,May 12 2017]

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால், மத்திய,மாநில அரசுகளுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்தார். இந்த கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் ஒட்டுமொத்த திரையுலகினர்களும், இணைந்து வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார்
இந்த நிலையில் தமிழ் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை இன்று சந்திக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். இந்த சந்திப்பு சற்று முன்னர் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
முதல்வருடனான இந்த சந்திப்பில் விஷால், கதிரேசன், ஞானவேல்ராஜா, எஸ்.ஆர்.பிரபு, பிரகாஷ்ராஜ், கெளதம் மேனன், ஆர்.பி.உதயகுமார், அபிராமி ராமநாதன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் முதல்வரிடம் திரையுலகம் சார்பில் மனு ஒன்று அளிக்கப்பட்டது. இந்த மனுவில், 'திரையரங்குகள் உருவாக்க அனுமதி, திருட்டு விசிடி ஒழிப்பு, பேருந்துகள்/தனியார் கேபிள் டிவிகளில் உரிமம் பெறாத திரைப்படங்களை ஒளிபரப்புவதை தடை செய்தல் போன்ற கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த சந்திப்பின்போது அமைச்சர் செங்கோட்டையன் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.