விதையாய் இருந்தவரை இழந்து விட்டோம்: நெல் ஜெயராமன் மறைவு குறித்து விஷால்

  • IndiaGlitz, [Thursday,December 06 2018]

மரபணு மாற்றம் செய்யும் விதைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்த சாதனை விவசாயி நெல் ஜெயராமன் இன்று காலை காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், விவசாய சங்க நிர்வாகிகள் கோலிவுட் திரையுலகினர் அஞ்சலி செலுத்தியும் இரங்கல் தெரிவித்தும் வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் விஷால், நெல் ஜெயராமன் மறைவிற்கு இரங்கல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இயற்கை விவசாய போராளி வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நெல் ஜெயராமன் அவர்கள்.

மரபணு மாற்ற விதை திட்டங்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்தவரும், 170க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை மீட்ட சாதனை மனிதர்.

பாரம்பரிய நெல் விதைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வையும், விவசாயத்தில் ஆர்வம் காட்டும் இளைய சமுதாயத்தினர் மத்தியில் எடுத்து செல்வதில் மிக மிக முக்கியமானவர்.

நெல் ஜெயராமன் அவரை இழந்து வாடும் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.