கிரிக்கெட் விளையாட போன இடத்தில் ட்ரோன் கேமராவுடன் விளையாடிய இந்திய வீரர்? வைரல் வீடியோ!

இந்தியக் கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பராக இருந்து வருகிறார் ரிஷப் பண்ட். இவர் கிரிக்கெட் விளையாடுவது மட்டுமல்ல, கிண்டல் அடித்துக் கொண்டு நண்பர்களுடன் விளையாட்டு காட்டுவது, வித்தியாசமான செயல்களின் ஈடுபடுவது போன்ற விஷயங்களில் ஆர்வம் கொண்டவர். அந்த வகையில் தற்போது இவர் செய்து இருக்கும் ஒரு காரியம் சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகல் இரவு போட்டியாக நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து அணி தற்போது 112 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி இருக்கிறது. அக்சர் படேல் இந்தப் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிரடி காட்டி இருக்கிறார்.

இந்த போட்டி பிங்க் பந்து போட்டியாக இருக்கும் என்பதால் முன்னதாக இந்திய வீரர்கள் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அப்படி பயிற்சி விளையாட்டில் ஈடுபட்டபோது இந்தியக் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட தனது ட்ரோன் கேமராவுடன் விளையாடி இருக்கிறார். பயிற்சிக்கு இடையே கொடுக்கப்பட்ட சிறிய நேரத்தில் இந்த வேலையை பண்ட் செய்து இருக்கிறார். இதைப் பார்த்த புஜாரா, அஸ்வின், விராட் கோலி ஆகியோரும் ட்ரோன் கேமராவுடன் விளையாடி இருக்கின்றனர். இந்த வீடியோவை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறது.

இதைப் பார்த்த ரிஷப் தனது டிவிட்டர் பக்கத்தில் புதிய ட்ரோன் கேமரா பற்றி விளக்கத்தை அளித்து இருக்கிறார். அதில் தனது ட்ரோன் கேமராவிற்கு பெயர் வைத்து இருப்பது குறித்தும் கூறி இருக்கிறார். “நான் ஸ்டம்பிற்கு பின்னால் அதிக நேரம் செலவிடுகிறேன். இதனை மாற்றும் விதமாக நான் புதிய ட்ரோன் கேமராவை வாங்கி இருக்கிறேன். இந்த கேமராவிற்கு நான் “ஸ்பைடி” என்ற பெயர் வைத்து இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருகிறது.