குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் மாபெரும் பேரணி..!

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டது போல் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பேரணியில் ஈடுபட்டுள்ளார்.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2015-ஆம் ஆண்டுக்கு முன்னர் வரை இந்தியாவில் குடியேறிய அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் மசோதா அண்மையில் இரு அவைகளிலும் நிறைவேறியது. இந்த சட்டத்திருத்தத்தில் முஸ்லீம் சமூகத்தினர் சேர்க்கப்படாததாலும் இன்னும் சில திருத்தங்களை மேற்கொள்ள கூறியும் இந்தியா முழுவதும் போராட்டம் வலுபெற்றுள்ளது.

கொல்கத்தாவில் இன்று பிற்பகலில் நடைபெற்ற இந்த பேரணியில் முதல்வர் மம்தா தலைமையில் பல்லாயிரக்கணக்கான திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
பேரணியில் கலந்துகொண்டவர்கள் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எதிராக முழக்கமிட்டபடி சென்றனர். அண்ணல் அம்பேத்கர் சிலை முன்பு தொடங்கி ஜோரசங்கோ தாகூர் மாளிகை வரை இந்த பேரணி நடைபெறுகிறது.அந்த மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கர் மம்தா பேரணியை அறிவித்தபோது, இது சட்டவிரோதமானது என்று கண்டித்தார். ஆனால், அதைப் புறந்தள்ளிவிட்டு ஆயிரக்கணக்கானவர்களின் ஆதரவுடன் பேரணியில் பங்கேற்றார் மம்தா.

“குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய இரண்டுக்கும் மேற்கு வங்க மாநிலத்தில் இடமில்லை” என அவர் கூறினார். அவர் இதனை உறுதிமொழியாகக் கூற பேரணியில் இருந்தவர்கள் அவரை வழிமொழிந்தனர்.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தியாகிகள் நினைவிடம் அருகே திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை கண்டித்து முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.

கேரளா, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்க முதல்வர் குடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ளனர்.