மாட்டுச் சாணத்தில் குளித்தால் என்ன நடக்கும்? வைரல் வீடியோவை தொடர்ந்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

  • IndiaGlitz, [Thursday,May 13 2021]

மாட்டுச்சாணம் மற்றும் கோமியம் ஒரு கிருமிநாசினியாக பயன்படும் என்ற நம்பிக்கை இந்தியா முழுவதும் பொதுவாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது கொரோனா நோய் பரவலை அடுத்து மாட்டுச் சாணம் மற்றும் கோமியத்தில் கொரோனாவிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாகச் சிலர் நம்பி வருகின்றனர். இதுகுறித்தும் அவ்வபோது சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்திரப்பிரதேச மாநிலத்தின் பாஜக எம்எல்ஏ ஒருவர் நான் தினமும் கோமியம் அருந்துகிறேன். அதனால்தான் எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை எனக் கூறி இருந்தார். தற்போது மீண்டும் அதேபோன்ற ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள ஸ்ரீசுவாமி நாராயண குருக்கல் விஸ்வவித்யா பிரதிஸ்தனம் எனும் பள்ளியில் சிலர் கூட்டாகச் சேர்ந்து மாட்டுச் சாணத்தை கோமியத்தில் கலந்து உடல் முழுவதும் தேய்த்து குளிக்கின்றனர்.

மேலும் மாட்டுச் சாணம் மற்றும் கோமியத்தில் கொரோனா நோய்க்கு எதிரான வைட்டமின் பி-12 இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர். அதோடு வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ இதுபோன்று மாட்டுச்சாணத்தில் குளியல் போடும்போது கொரோனா வைரஸ் நம்மைத் தாக்காது என்றும் அந்த வீடியோவில் கூறப்பட்டு இருக்கிறது.

மாட்டுச் சாணத்தை தலை முதல் பாதம் வரை பூசி குளிக்கும் இந்த வீடியோ கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகிறது. இதையடுத்து இந்திய மருத்துவ அசோசியேசன் தேசிய தலைவர் டாக்டர் ஜெயலால் மாட்டுச் சாணம் அல்லது மாட்டு சிறுநீர் கொரோனா வைரஸை எதிர்க்கும் செயல்திறன் கொண்டது என்று கூறுவதற்கு எந்தவித அறிவியல் ரீதியிலான காரணங்களும் இல்லை என்றும் மேலும் அது பிற நோய்கள் பரவ வாய்ப்பு அளிக்கும் என்றும் தெரிவித்து உள்ளார்.