டெல்லி தப்ளிக் ஜமாத் பின்னணி என்ன??? மாநாடு குறித்த விரிவான தகவல்கள்!!!

  • IndiaGlitz, [Thursday,April 02 2020]

டெல்லி நிஜாமூதின் பகுதியில் அமைந்திருக்கும் தப்ளிக் அமைப்பு, தற்போது இந்தியா முழுக்க பேசுபொருளாக மாறியிருக்கிறது. இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை உயர்ந்திருப்பதற்கு டெல்லி நிஜாமூதின் மாநாடு முக்கிய காரணம் என்று சமூக ஊடகங்களில் ஒருபக்கம் வெறுப்பபு அரசியல் பரப்பப்பட்டு வருகிறது. இதை தப்ளிக் ஜமாத் அமைப்பினர் மறுத்தும் வருகின்றனர்.

தப்ளிக் அமைப்பு, ஒரு அரசியல் சாராத ஆன்மீக அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது. இது மதபோதனைகளை வளர்ப்பதற்காக 1927 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இருக்கிறது. தப்ளிக் ஜமாத் அமைப்பின் கீழ் பல்வேறு மசூதிகள் செயல்படுகின்றன. குருமார்களின் வாழ்வாதாரம், மசூதிகளின் செயல்பாடுகளை இந்த அமைப்பு கவனித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல நாடுகளில் இருந்து மக்களை வரவழைத்து போதனை கூட்டம் நடத்துவது இந்த அமைப்பின் முக்கிய செயல்பாடுகளில் ஒன்றாக இருக்கிறது. மேலும், 150 நாடுகளில் தப்ளிக் அமைப்பு கிளைபரப்பி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் நிஜாமூதின் பகுதியில், கடந்த பிப்ரவரி மாதம் இந்த ஆண்டிற்கான கூட்டம் தொடங்கியிருக்கிறது. பாகிஸ்தான் நட்சத்திர கிரிக்கொட் வீரர் சையது அப்ரிடி, சையது அன்வர் போன்றோர் முக்கிய அழைப்பாளர்களாக தொடக்க விழாவில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

மலேசியா, சவுதி அரேபியா, இந்தோனேசியா, கிர்கிஸ்தான் போன்ற நாடுகளை சார்ந்த 2,000 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். மாநாட்டின் தொடக்கத்தில் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  மார்ச் 21 அன்று இந்தியாவில் ஒருநாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனவே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து கலந்து கொண்டவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முற்பட்டனர். தமிழகத்தில் இருந்து 1,500 பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர்,  கிடைத்த விமானம், ரயில், பேருந்து என மாறி மாறி தமிழகம் வந்து சேர்ந்து இருக்கின்றனர். பலர் தமிழகம் திரும்பிய நிலையில், மார்ச் 25 ஆம் தேதி ஈரோட்டில் மாநாட்டில் கலந்து கொண்ட தாய்லாந்தை சார்ந்த இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு, ஈரோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தாய்லாந்து நாட்டினருடன் பயணித்த தமிழகத்தை சார்ந்த 7 பேர்களில் பெண் மருத்துவர், 10 மாதக் குழந்தை, மதுரையில் இறந்து போன ஒருவர் எனப் பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதை உறுதிப்படுத்திய தமிழக சுகாதாரத்துறை டெல்லி சென்று மீண்டவர்களை ஈரோடு பெருந்துறையில் தனிமைப்படுத்தி வைத்தனர்.

தமிழகம் மட்டுமல்லாது, ஜம்மு-காஷ்மீர், தெலுங்கானா, புதுடெல்லி எனப் பல மாநிலங்களில் இருந்தும் தப்ளிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர். தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அந்தந்த மாநிலங்களும் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் விவரங்களை சேகரிக்கத் தொடங்கியது. மார்ச் 23 இரவு 12 மணி முதல் மீண்டும் இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பல வெளிநாட்டினர் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லமுடியாமல் ஜமாத்திலேயே தங்கிவிட்டனர்.

தப்ளிக் அமைப்பினர் முதலில், அரசு திடீரென ஊரடங்கு அறிவித்ததே சிக்கல் ஏற்படக் காரணம் எனக் கூறியிருந்தனர். ஆனாலும் ஜமாத்தில் பலர் தங்க வைக்கப்பட்டு ஊரடங்கை மதித்து செயல்பட்டதாக தப்ளிக் அமைப்பு விளக்கம் கொடுத்தது. மேலும், கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு பாதுகாப்பு கோரி டெல்லி காவல்துறைக்கு கடிதம் எழுதியதாகவும் கூறியது. ஒவ்வொரு ஆண்டும் வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கம். முதலில் சந்தேகப்படும் படியாக எதுவும் நடக்கவில்லை எனவும் அந்த அமைப்பு விளக்கம் கொடுத்திருக்கிறது. தற்போது தப்ளிக் ஜமாத் அமைப்பினர் மீது டெல்லி போலீஸார் வழக்குப் பதிவுசெய்திருக்கின்றனர்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டைச் சேர்ந்த 2,361 பேர் டெல்லியில் பல்வேறு இடங்களில் மாட்டிக்கொண்டிருக்கின்றனர். அவர்களில் கொரோனா அறிகுறியுள்ள 617 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களில், நேற்றுவரை 24 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது. தப்ளிக் அமைப்பு முதலில் சுகாதாரத்துறையின் நடவடிக்கைகளுக்கு கட்டுப்படவில்லை என்றும் அந்த விவகாரத்தில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலின் நேரடிக் கண்காணிப்பு இருந்ததும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட பல வெளிநாட்டினர் வேறு மாநிலங்களின் மசூதிகளுக்கும் பயணித்து இருக்கின்றனர். அப்படி கண்காணிக்கப்பட்ட 250 வெளிநாட்டினருக்கு சோதனை நடத்தப்பட்டது. அவர்களில் 20 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது. ஜார்கண்டில் மலேசிய நாட்டை சேர்ந்த ஒரு இளைஞருக்கும் கொரோனா நோய்த்தொற்று இருப்பது தற்போது உறுதியாகியிருக்கிறது.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவின் டெல்லி ஜமாத் மாநாட்டிற்கு வந்தவர்களில் 291 பேர் தவறான விளக்கங்களை அளித்து விசா பெற்றிருப்பதும் தெரியவந்திருக்கிறது. உத்திரபிரதேசத்தில் 75, தமிழ்நாடு 60, கர்நாடகா 50, மகாரஷ்டிரா 30, மத்தியப்பிரதேசம் 20, தெலுங்கானா 11 என்கிற எண்ணிக்கையில் வெளிநாட்டினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையில் இந்தோனேசியாவை சேர்ந்தவர்கள் தான் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் மட்டும் 110 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 234. இவர்களில் டெல்லி சென்று மீண்டவர்கள் 190 பேர் என்பதும் குறிப்பிடத் தக்கது. தமிழக சுகாதாரத்துறை டெல்லியில் இருந்து திரும்பியவர்கள் 1103 பேர் என்றும் அவர்களில் 658 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது என்றும் தெரிவித்தது. பலரது விவரங்கள் தெரியாத நிலையில் சுகாதாரத்துறை தற்போது தேடுதல் வேட்டையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.