ஒருவழியா கண்டுபிடிச்சாச்சு... சீனாவில் பன்றிகளிடம் பரவும் புதிய வைரஸ் என்ன தெரியுமா??? விஞ்ஞானிகள் தகவல்!!!

  • IndiaGlitz, [Thursday,July 02 2020]

 

கடந்த சில தினங்களுக்கு முன்பு சீனாவில் பன்றிகளிடம் ஒரு புதிய தொற்று பரவி வருவதாகப் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நோய்த்தொற்று தற்போது பன்றிகளிடம் காய்ச்சலை ஏற்படுத்தும் நோய்த்தொற்றாக மாறியிருக்கிறது என்றும் பிற்காலத்தில் மனிதர்களுக்கு இது பெரிய ஆபத்தை உண்டாக்கும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்திருந்தனர். இந்நிலையில் பன்றிகளிடம் பரவும் நோய்த்தொற்று என்ன என்பதை குறித்த விரிவான விளக்கம் வெளியாகி இருக்கிறது.

சீனாவில் பன்றிகளிடையே பரவிவரும் புதிய நோய்த்தொற்று குறித்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் அது ஸ்வைன் ஃப்ளூ என்பதை உறுதிப்படுத்தி இருக்கின்றனர். மேலும் இந்த வைரஸ் சீனாவில் கடந்த 2011 முதலே காணப்படுகிறது என்ற தகவலையும் அமெரிக்க விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மேலும், இது கொரோனா வைரஸ் போன்று மனிதர்களிடம் மிக எளிதாகப் பரவிவிடும் தன்மைக் கொண்டது. எனவே ஆரம்பத்திலேயே இதைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் எனவும் எச்சரிக்கை செய்துள்ளனர்.

சீனாவின் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கண்டுபிடிக்கப் பட்ட கொரோனா வைரஸ் வெறுமனே 6 மாதத்தில் 1 கோடிக்கும் மேற்பட்ட மக்களிடம் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் புதிய வைரஸ் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவும் மனிதர்களுக்கு எளிதாக நோய்த்தொற்றை ஏற்படுத்தி பெருந்தொற்றாக மாறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட விஞ்ஞானிகள் வௌவால்களில் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் வௌவால்களிடம் இருந்து எறும்பு திண்ணிகளிடம் பரவி மனிதர்களுக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டதாக மாறியிருக்கலாம் என்ற கருத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

தற்போது கொரோனா நோய்த்தொற்று பரவல் குறித்து உலகச் சுகாதார நிறுவனம் சீனாவின் வுஹான் மாகாணத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. நோய்ப் பரவலின் ஆரம்பக் கட்டத்தை தெரிந்து கொண்டால் நோயைக் கட்டுப்படுத்துவது எளிதாக இருக்கும் என்ற நோக்கில் இந்த ஆய்வுகள் தற்போது முடுக்கிவிடப் பட்டு இருக்கின்றன. சீனா தரப்பில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து, “வுஹான் இறைச்சி சந்தையில் கொரோனா வைரஸ் தொற்றுள்ள வௌவாலை சாப்பிட்ட பாம்பின் இறைச்சியை வாங்கி உண்டதில் மனிதர்களுக்கும் தொற்று பரவியது” எனத் தெரிவிக்கப் பட்டது. அப்போதைய ஆய்விற்கு பின்னர் இதுபோன்ற பல வைரஸ் பரவல்கள் அடுத்தடுத்து உலகத்தைத் தாக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்திருந்தனர்.

அதைத்தொடர்ந்து தற்போது பன்றிகளிடம் ஸ்வைன் ஃப்ளூ எனப்படும் புதிய வைரஸ் தொற்று அதிகமாக பரவிவருவதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து பி.ஏ.என்.எஸ் மருத்துவ இதழில் அமெரிக்க விஞ்ஞானிகள் விரிவான ஆய்வறிக்கையை வெளியிட்டு உள்ளனர். சீனாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஸ்வைன் ஃப்ளூ எனப்படும் பன்றிக் காய்ச்சல் அதிவேகமாகப் பரவியது. அது பன்றிகளிடம் தீவிரமான காய்ச்சலை ஏற்படுத்தியது. இந்தக் காய்ச்சலுக்கு காரணமான ஸ்வைன் ஃப்ளூ வைரஸை சீனா விஞ்ஞானிகள் ஜி4இஏஎச்1என்1 எனப் பெயரிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வைரஸ்தான் மீண்டும் சீனாவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என அமெரிக்க விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தி உள்ளனர்.

மேலும் சீனாவில் 50 கோடிக்கும் அதிகமான பன்றிகள் வளர்க்கப் படுகின்றன. தற்போது ஏற்பட்டு இருக்கும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக சீனாவின் 10 மாகாணங்களில் கடுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் சீனா முழுவதும் இந்த ஆய்வு விரைவுப் படுத்தப்பட வேண்டும் என்றும் ஆரம்பக் கட்டத்திலேயே இந்த நோயைக் கட்டுப்படுத்தாவிட்டால் மனித இனத்திற்கு மற்றொரு பெரிய ஆபத்தாக இது மாறிவிடும் எனவும் அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.