பாடகி சுசித்ரா எங்கே?

  • IndiaGlitz, [Wednesday,March 15 2017]

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு அதில் கோலிவுட் பிரபலங்களின் சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியாகின. ஹேக்கர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பக்கத்தில் வெளியான வீடியோவினால் கோலிவுட் திரையுலகில் இதுவரை ஏற்படாத பரபரப்பு ஏற்பட்டது.

ஒருபக்கம் அடுத்து யாருடைய வீடியோ வரும் என காத்திருக்கும் ஒரு கூட்டம் இன்னொரு பக்கம் நட்சத்திரங்களின் பதட்டம் என இருந்தது. இந்நிலையில் பாடகி சுசித்ரா இந்த பரபரப்புக்கு காரணமில்லை என்று கூறப்பட்டாலும் அவர் நேரில் ஊடகங்களில் தோன்றி விளக்கம் கொடுக்கவில்லை. ஒருசில ஊடகங்களில் தொலைபேசி பேட்டியின்மூலம் மட்டுமே விளக்கமளித்தார்.

சுசித்ரா மன உளைச்சலில் இருப்பதாக அவரது கணவர் கார்த்திக் குமார் விளக்கமளித்தபோதிலும் அவரால் கூட சுசித்ரா எங்கே இருக்கின்றார், யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றார் என்பதை கண்டுபிடிக்கவில்லை. கடந்த சில நாட்களாக ஊடகங்கள் அவரை தொடர்பு கொள்ள முயன்றும் அவர் இருக்குமிடம் குறித்த தகவல் இன்று வரை யாருக்கும் புரியாத மர்மமாக உள்ளது.

அவருடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியான சர்ச்சைக்குரிய வீடியோக்களுக்கு அவர் காரணமில்லை என்பது உண்மையானால் அவர் ஊடகங்களின் முன் நேரில் தோன்றி விளக்கமளித்தால் மட்டுமே இந்த பிரச்சனை முடிவுக்கு வரும். மேலும் அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டிருந்தால் கவுன்சிலிங் கொடுக்கப்பட வேண்டியதும் அவசியமாகவே கருதப்படுகிறது. சுசித்ரா கண்டிப்பாக பாதுகாப்பாக இருப்பார் என்றும் அவர் விரைவில் வெளியே வந்து விளக்கம் அளிப்பார் என்றும் நம்புவோம்.