close
Choose your channels

கணம் கோட்டாரே உங்களுக்குமா? கொரோனா காலர் டியூனை சரமாரியாக வறுத்தெடுத்த நீதிபதிகள்!

Saturday, May 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா பரவல் ஆரம்பத்ததில் இருந்தே விதவிதமான விழிப்புணர்வு விளம்பரங்கள் காலர் டியூனாக செல்போன்களில் ஒலித்து வருகிறது. ஆரம்பத்தில் இதை எரிச்சலாக நினைத்த பலரும் தற்போது அதற்கு பழகிப்போய் விட்டோம். ஆனால் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு வரும் காலர் டியூன் விளம்பரம் குறித்து உயர் நீதிமன்றமே கொதித்துபோன விவகாரம் நடந்து இருக்கிறது.

கொரோனா தடுப்பூசி மற்றும் தடுப்பூசி விழிப்புணர்வு குறித்து மத்திய அரசும், டெல்லி அரசாங்கமும் எவ்வாறு தயாராகி வருகிறது என்பது தொடர்பான ஒரு வழக்கு தற்போது டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விபின் சிங், ரேகா பிள்ளை இருவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு செல்போனில் வரும் காலர் டியூன் குறித்து பேசும்போது மத்திய அரசை கடுமையாக விமர்சித்து உள்ளனர்.

அதாவது “மத்திய அரசிடம் கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லாதபோது மக்கள் எப்படி தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியும்? உங்களிடம் போதுமான தடுப்பூசிகளை கையிருப்பில் வைத்துக் கொண்டு இந்த விளம்பரத்தை ஒலிப் பரப்புங்கள். செல்போனில் கால் செய்தாலே இந்த காலர் டியூன் வந்து எரிச்சலூட்டுகிறது. தடுப்பூசி கையிருப்பில் இல்லாதபோது இந்த காலர் டியூனால் என்ன பயன்? ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி வழங்கிட வேண்டும், பணம் கொடுத்து வாங்க மக்கள் தயாராக இருந்தாலும் அவர்களுக்கு வழங்க இருப்பு இருக்க வேண்டும்.

எனவே இந்த காலர் டியூனை எடுத்து விட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் காலச் சூழலுக்கு ஏற்ப வித்தியாசமான விளம்பரங்களை ஒலிப்பரப்புங்கள். கடந்த ஆண்டை போல கொரோனா நோய்த்தொற்றில் எப்படி பாதுகாப்பாக இருப்பது என்பது போன்ற விளம்பரங்களைச் செய்யுங்கள். மேலும் நடிகர் அக்சய் குமாரை வைத்து கொரோனா விழிப்புணர்வு விளம்பரங்களை டிவி, வானொலியில் ஒளிப்பரப்புங்கள். அதோடு ஆக்சிஜன் சிலிண்டர் எங்கு கிடைக்கும்? அதை எங்கு நிரப்பலாம் என்பது போன்ற காலத்திற்கு ஏற்றாற்போன்ற விளம்பரங்களை செய்வதால் மக்களுக்கு நன்மை கிடைக்கும்’‘ எனக் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் வரும் மே 18 ஆம் தேதிக்குள் செல்போன் காலர் டியூன், தொலைக்காட்சி, வானொலி போன்றவற்றில் கொரோனா விளம்பரங்கள் செய்வது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த விவகாரத்தைத் தொடர்ந்து நமது நெட்டிசன்கள் “கணம் கோட்டாரே எங்களுக்கு மட்டும்தான் இப்படி எரிச்சலாகிறது என நினைத்து இருந்தோம்? உங்களுக்குமா“ என சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.