சொந்தச் செலவில் சூனியம் வைத்தக்கொண்ட திருடர்கள்… வகையாக மாட்டிக்கொண்ட சம்பவம்!!!

  • IndiaGlitz, [Wednesday,January 13 2021]

நம்மூர் திருடன்மார்கள், திருடப் போன இடத்தில் தோசை ஊற்றி சாப்பிடுவது, டிவி பார்ப்பது போன்ற விசித்திர செயல்களை செய்து செய்து அவ்வபோது சிரிப்பை வரவழைத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இங்கிலாந்தில் திருடச்சென்ற இடத்தில் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போனால் 2 திருடர்கள் மாட்டிக்கொண்ட சம்பவம் கடும் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்தின் ஸ்டோஃபோர்ஷையர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு 49 வயது மற்றும் 42 வயதில் உள்ள 2 திருடர்கள் சென்றுள்ளனர். அவர்கள் அங்குள்ள பொருட்களை எல்லாம் எப்படி எடுத்துச் செல்வது? எதையெல்லாம் எடுத்துக் செல்லலாம்? என படு பிசியாக லிஸ்ட் போட்டு கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக அங்கு போலீஸ் வந்து விடுகிறது. மேலும் அங்கு இருந்த திருடர்களை பார்த்த போலீஸ் அலட்டிக் கொள்ளாமல் அவர்களை கைது செய்து விடுகிறது.

இந்நிலையில் இந்த வீட்டிற்கு எப்படி போலீஸ் எப்படி வந்தது எனத் தெரியாமல் அந்த 2 திருடர்கள் முழித்த நிலையில் போலீஸே தானாக விளக்கமும் அளித்து இருக்கிறது. அதாவது அந்த 2 திருடர்களில் ஒரு திருடனுடைய பாக்கெட்டில் செல்போன் இருந்ததாகவும் அந்த செல்போன் லாக் கீ செய்யப்படாமல் இருந்ததால் தவறுதலாக 911 அவசர அழைப்புக்கு அழைப்பு வந்ததாகவும் கூறியுள்ளனர்.

தவறுதலாக 911 க்கு போன் போய்விட்டதால் எதிர்முனையில் இருந்த போலீஸ், இந்தத் திருடர்கள் பேசிய அனைத்தையும் அமைதியாகக் கேட்டு உள்ளனர். பின்னர் சிக்னலை வைத்து அந்த இடம் எங்கு இருக்கிறது என கண்டுபிடித்து சம்பவ இடத்திற்கும் வந்துள்ளனர். இந்நிலையில் திருடப்போன இடத்தில் செல்போன் கீயை லாக் செய்யாமல் விட்டதால் போலீஸில் மாட்டிக்கொண்ட சம்பவம் கடும் வைரலாகி இருக்கிறது.