போலி மீடியாக்கள், போலியான செய்திகள்: யாஷிகாவின் பதிவால் பரபரப்பு!

  • IndiaGlitz, [Tuesday,August 03 2021]

தனக்கு நிகழ்ந்த கார் விபத்து குறித்து ஒரு சில போலி மீடியாக்கள் போலி தகவல்களை பகிர்ந்து வருவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை யாஷிகா பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் யாஷிகா சென்ற கார் விபத்துக்குள்ளான நிலையில் இந்த விபத்தில் அவரது தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யாஷிகா, இந்த விபத்து குறித்து அவர் மனம் திறந்து கூறியுள்ளார். அதில் ’நான் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக பலர் விமர்சனம் செய்கின்றனர். சட்டம் என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரி தான் இருக்கும். நான் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியிருந்தால் நான் இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்க மாட்டேன், ஜெயிலில் இருந்து இருப்பேன்.

நான் மது அருந்தவில்லை என்பதை போலீசார் ஏற்கனவே உறுதி செய்து உள்ளனர். மருத்துவ அறிக்கைகளும் அதையே குறிப்பிடுகின்றன. அப்படி இருந்தும் நான் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக என்னை பற்றி போலியான செய்திகளை ஒரு சில போலி மீடியாக்கள் தெரிவித்து வருகின்றன. ஏற்கனவே இதே போல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் என்னைப் பற்றி தவறான தகவல் தெரிவித்தவர்கள் மீது நான் அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளேன் என்று யாஷிகா அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.