close
Choose your channels

ஓடும் பேருந்திலேயே தாலி கட்டிய இளைஞர்.. வாணியம்பாடியில் ஒரு ஒருதலைக் காதல்

Tuesday, December 10, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சான்றோர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரின் மகன் ஜெகன் (27). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், ஆம்பூர் கருமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த 26 வயது இளம்பெண்ணைக் கடந்த 5 ஆண்டுகளாக ஒருதலையாகக் காதலித்துவந்துள்ளார். இரண்டு பேரும் வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமிய கல்லூரியில் படித்துள்ளனர்.

அப்போது, அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், ஜெகனின் காதலை அந்தப் பெண் ஏற்கவில்லை. இரண்டு பேரும் வெவ்வேறு சமூகம் என்பதால் காதல் கைகூடவில்லை என்று கூறப்படுகிறது. இதன்பின்னர், அந்தப் பெண் வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள ரசாயன நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். தன்னுடன் வேலைசெய்யும் சொந்த சமூகத்தைச் சேர்ந்த இளைஞருடன் அந்தப் பெண்ணுக்கு காதல் மலர்ந்துள்ளது.இதையடுத்து, இரு வீட்டாரும் கலந்துபேசி நேற்று முன்தினம் வாணியம்பாடியில் திருமண நிச்சயதார்த்தத்தையும் நடத்தி முடித்துவிட்டனர். இதையறிந்த ஜெகன் ஆத்திரமடைந்துள்ளார். அந்தப் பெண்ணைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ளத் திட்டமிட்டார். இன்று காலை ஆம்பூரிலிருந்து அந்தப் பெண் வழக்கம்போல தனியார் பேருந்தில் ஏறி வாணியம்பாடியில் உள்ள நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்றுகொண்டிருந்தார்.

திடீரென அந்தப் பேருந்தில் ஜெகனும் ஏறினார். அந்தப் பெண்ணின் அருகில் சென்று தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கூறி கெஞ்சியுள்ளார். `எனக்கு நேற்று நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது; விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது’ என்று அந்தப் பெண் கூறியிருக்கிறார். இதை ஏற்காத ஜெகன், ஏற்கெனவே மூன்று முடிச்சுப் போட்டு பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த தாலிக் கயிற்றை எடுத்து அந்தப் பெண்ணின் கழுத்தில் திடீரென போட்டுவிட்டார்.

இதை எதிர்பார்க்காத அந்தப் பெண் அதிர்ச்சியடைந்து தாலிக் கயிற்றைக் கழுத்திலிருந்து வெளியே எடுத்தார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த ஜெகன், `நீதான் என் மனைவி; இனிமேல் என்னுடன்தான் இருக்க வேண்டும்’ என்றுகூறி கடுமையாக நடந்துகொண்டார். இந்த திடீர் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் கத்திக் கூச்சலிட்டார். பேருந்திலிருந்த பயணிகளும் ஜெகனைப் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.பின்னர், வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் போலீஸாரிடம் அவரை ஒப்படைத்தனர். ஜெகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். வாணியம்பாடி நகர போலீஸார், ஜெகனை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்திவருகிறார்கள்.

ஒருதலைக் காதலால் ஓடும் பேருந்தில் நடைபெற்ற இந்த சம்பவம், வாணியம்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.