close
Choose your channels

சடலங்களைப் பதப்படுத்தும் “பார்மலின்” வேதிப்பொருள் மீன்களுக்கா??? பதற வைக்கும் அதன் விளைவுகள்

Monday, March 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சடலங்களைப் பதப்படுத்தும் “பார்மலின்” வேதிப்பொருள் மீன்களுக்கா??? பதற வைக்கும் அதன் விளைவுகள்

 


காசி மேடு மீன் சந்தையில் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் மீன்களின் தரம் குறைந்து காணப்படுவதாகத் தொடர்ந்து குற்றச் சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தன. எனவே கடந்த 28 ஆம் தேதி உணவு பாதுகாப்புத் துறையினர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் 2 டன் மீன்களில் “பார்மலின்” கலக்கப் பட்டு இருப்பதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பார்மலின் வேதிப் பொருட்கள் கலந்த மீன்களை அதிகாரிகள் உடனடியாகப் பறிமுதல் செய்தனர்.


“பார்மலின்” கலக்கப் பட்ட மீன் விற்பனையால் சென்னை காசிமேட்டில் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் எது நல்ல மீன்? எது பார்மலின் கலக்கப் பட்ட மீன் எனத் தெரியாமல் குழப்பத்தில் தவிக்கும் நிலை ஏற்பட்டது. ஏனெனில் பார்மலின் எந்தவிதமான வாசனையையும் கொண்டிருக்காது. மேலும் கண்டுபிடிப்பதும் கடினமாக இருக்கும். கலக்கப் பட்ட பொருளின் உடல் பாகங்களை அறுத்து சோதனைக்கு உட்படுத்தும் போது தான் பார்மலின் கலப்பை தெரிந்து கொள்ள முடியும்.


இச்சம்பவத்தால் தமிழகம் முழுவதும் உள்ள மீன்சந்தைகளில் மீன்களின் தரத்தை சோதனை செய்ய உத்தவிட்டுள்ளதாக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், தரம் குறைந்த மீன்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மீன் துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.


சடலங்களைப் பதப்படுத்தப் பயன்படுத்தப் படும் பார்மலின் மீன்களில் கலக்கப்படுவது குறித்து அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஏனெனில் இந்தப் பார்மலின் புற்றுநோய் போன்ற கடும் பாதிப்புகளை விளைவிக்கக் கூடியது எனவும் தெரிய வந்துள்ளது. கொரோனா அச்சத்தால் மக்கள் ஏற்கனவே பீதியடைந்துள்ள நிலையில் இச்சம்பவம் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் எனவும் கவலை தெரிவித்துள்ளனர்.

“பார்மலின்” என்பது பார்மால்டிஹைடு என்ற வேதிப்பொருளில் இருந்து உருவாக்கப் படுகிறது. இந்த வேதிப்பொருளை தண்ணீரில் கலந்து மீன்கள் மீது தடவும்போது மீன்கள் 15 நாட்கள் வரையிலும் கெடாமல் இருக்கும். ஆழ்கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் பொதுவாக இந்த வேதிப் பொருள்களைப் பயன்படுத்து கின்றனர். பிணவறைகளில் சடலங்களை பாதுகாக்கவும் இதே பார்மலின் தான் பயன்படுத்தப் படுகிறது. 37% முதல் 40% வரை இந்த பார்மலின் வேதிப் பொருள்கள் பிணங்களின் மீது தெளிக்கப் படுகின்றன.

பார்மலின் அதிகளவு நச்சுத் தன்மை வாய்ந்தது. இது நிறமற்ற வேதிப் பொருள். மருத்துவ மனைகளில் கிருமி நாசினியாகவும் பயன்படுத்தப் படுகிறது. பார்மலின் கலந்த நீரில் மாமிசம், தாவரம் போன்று எதைப் போட்டு வைத்தாலும் அது கெட்டுப் போகாமல் இருக்கும் என்பதும் குறிப்பிடத் தக்கது.

பார்மலின் அளவில் 37% என்பது மனிதர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தக் கூடிய அளவாகும். பார்மலின் மீன்களுக்கு மட்டுமல்லாமல் நண்டு, இறால் போன்றவற்றையும் அழுகாமல் பாதுகாக்கப் பயன்படுத்தப் படுகிறது.

சிறுநீரகக் கோளாறு, வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு, புற்று நோய் போன்ற அபாயகரமான நோய் தாக்குதலுக்கு இந்த பார்மலின் காரணமாக அமையும் என்பதால் தற்போது மருத்துவர்கள் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.