close
Choose your channels

2015 ஐ நினைவுப்படுத்துமா செம்பரபாக்கம்? எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பகுதிகள்!

Wednesday, November 25, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

2015 ஐ நினைவுப்படுத்துமா செம்பரபாக்கம்? எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பகுதிகள்!

 

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 நீர்த்தேக்கங்களும் தற்போது நிவர் புயலின் காரணமாக விரைந்து நிரம்பி வருகிறது. அதில் செம்பரபாக்கத்தின் மொத்த கொள்ளளவு 24 அடி. நேற்று மதியமே 22 அடி நீர்மட்டம் நிறைந்ததால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் ஏற்பட்டது. ஒருவேளை இன்று அதன் முழு கொள்ளளவும் எட்டும் பட்சத்தில், இன்று இரவு நீர்த்தேக்கத்தில் இருந்து அதன் உபரி நீர் திறந்து விடப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று மதியமே அதன் உபரி நீர் திறந்து விடப்படும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் குறிப்பிட்டு உள்ளனர். இதைத் தொடர்ந்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு உபரிநீர் திறப்பு குறித்து தாமதமாக முடிவு எடுக்கப்பட்டதால்தான் அத்தனை பெரிய சேதம் ஏற்பட்டது. தற்போது உபரி நீரைத் தேக்கி வைக்காமல் நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறந்து விடப்படும் என்று பொதுப்பணித் துறை அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு செம்பரபாக்கம் நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீரைத் திறந்துவிடுவது குறித்து சரியான நிர்வாக முடிவு எடுக்கப்படாமல் அடையாறு ஆற்றின் நீர் அளவு உயர்ந்து ஒட்டுமொத்த சென்னையே வெள்ளக்காடாக மாறியது. அதுபோன்ற சம்பவம் தற்போது நடைபெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று பொதுப்பணித் துறை மக்களுக்கு நம்பிக்கை அளித்து வருகிறது.

இன்று மதியம் 12 மணிக்கு செம்பரபாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்படும் என்பதால் ஏரி நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களுக்கு பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் வழுதியம்பேடு மற்றும் அடையாறு ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதியில் வசிப்பவர்களை வெளியேற்ற உத்தரவிடப் பட்டுள்ளது. அடையாறு ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டால் அடையாறு ஆறு, கூவம் ஆற்றின் வழியாக நீர் வந்து அப்படியே அது கடலில் கலக்கும்.

மேலும் செம்பரபாக்கம் ஏரிக்கு நீர்வரத்துக்கேற்ப படிப்படியாக நீர் வெளியேற்றம் உயர்த்தப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. செம்பரபாக்கம் ஏரியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.