close
Choose your channels

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370வது சட்ட்ப்பிரிவு நீக்கம்: அமித்ஷா அரசாணை

Monday, August 5, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ளார்.

கடந்த 1949-ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட இந்த 370வது சட்டப்பிரிவின்படி காஷ்மிரில் ராணுவம், வெளியுறவுத் துறை, தகவல் தொடர்பு துறை ஆகியவை தவிர பிற துறைகள் குறித்து நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்கள் இம்மாநிலத்தின் சம்மதம் இல்லாமல் இயற்ற முடியாது. அதேபோல் காஷ்மீரின் எல்லையை கூட்டவோ, குறைக்கவோ நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என இந்த சட்டப்பிரிவு கூறுகின்றது. மேலும் காஷ்மீரை சேர்ந்தவர்கள் பிறமாநிலத்தில் அசையா சொத்துக்களை வாங்கலாம், ஆனால் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்களும் காஷ்மீரில் நிலம் வாங்க முடியாது. இந்த சட்டப்பிரிவை நீக்கவோ, மாற்றம் செய்யவோ வேண்டும் என்றால் காஷ்மீர் சட்டமன்றத்தின் ஒப்புதலை பெற வேண்டும்.

மேலும் இந்த சட்டப்பிரிவின்படி காஷ்மீரை சாராதவர்களுக்கு இங்குள்ள நிறுவனங்களில் வேலை செய்ய முடியாது. அதேபோல் காஷ்மீர் மாநில பெண் வேறு மாநில நபரை திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டால் அந்த பெண்ணுக்கு சொத்தில் உரிமை இல்லை.

தற்போது காஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருவதால் இந்த சட்டப்பிரிவை நீக்க ஜனாதிபதியின் ஒப்புதல் மட்டுமே போதுமானது என்பதால் தற்போது அதிரடியாக இந்த சட்டப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமித்ஷா கூறும்போது, ''பிரிவு 370 காரணமாக ஜம்மு-காஷ்மீர் மக்கள் வறுமையில் வாழ்வதாகவும், இம்மாநிலத்தில் உள்ள தலித் மற்றும் பெண்களுக்கு நீதி கிடைக்காமல் இருந்ததாகவும், காஷ்மீரில் 3 குடும்பங்கள் மட்டுமே இத்தனை வருடங்களாக கொள்ளையடித்து வந்ததாகவும், தற்போது அம்மாநில மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆனால் அமித்ஷாவின் இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மத்திய அரசு ஜனநாயக படுகொலையை நிகழ்த்திவிட்டதாகவும், இந்த நடவடிக்கை எமெர்ஜென்சியை நினைவுபடுத்துவது போல் உள்ளதாகவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இரவோடு இரவாக கபடத்தனமாக காஷ்மீர் பிரிப்பு மசோதாவை அரசு தயார் செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.